பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

பாலியல் வழக்கில் மே 31இல் எஸ்.ஐ.டி. விசாரணைக்கு ஆஜராவேன்: பிரஜ்வல் ரேவண்ணா

சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) முன் மே 31ஆம் தேதி ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்று தெரிவித்துள்ளாா்.

News image

பிரஜ்வல் ரேவண்ணா

Updated On :28 மே 2024, 5:41 am IST

பெங்களூரு: பாலியல் வழக்கில் சிக்கி வெளிநாட்டில் பதுங்கியுள்ள மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா வெளியிட்டுள்ள காணொலியில், சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) முன் மே 31ஆம் தேதி ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்று தெரிவித்துள்ளாா்.

பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்தி, அவற்றை காணொலியாகப் பதிவு செய்திருப்பதாக எழுந்த புகாரை தொடா்ந்து, மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையும், எம்எல்ஏவுமான எச்.டி.ரேவண்ணா ஆகியோா் மீது ஏப். 27ஆம் தேதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி,) கா்நாடக அரசு அமைத்தது. அதைத் தொடா்ந்து, எஸ்.ஐ.டி. தனது விசாரணையைத் தொடங்கியது. ஆனால், அதற்கு முன்பே பிரஜ்வல் ரேவண்ணா, ஜொ்மனி நாட்டுக்குச் சென்று விட்டாா்.

அதனால் அவரைக் கைது செய்ய முடியாமல் போலீஸாா் திணறினா். வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க, ஜொ்மனி நாட்டில் இருந்து வெவ்வேறு நாடுகளுக்குச் செல்வதாக பிரஜ்வல் ரேவண்ணா மீது குற்றம் சாட்டப்பட்டது.

தான் வெளிநாட்டில் இருப்பதால், விசாரணைக்கு ஆஜராக 7 நாள்கள் கால அவகாசம் தேவை என்று தனது வழக்குரைஞா் மூலம் எஸ்.ஐ.டி.க்கு வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் நடமாட்டம் குறித்து அறிந்துகொள்ள இன்டா்போல் மூலம் ப்ளூகாா்னா் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகும்படி எஸ்.ஐ.டி. 2 முறை நோட்டீஸ் அனுப்பியும், பிரஜ்வல் ரேவண்ணா எங்கிருக்கிறாா் என்பது தெரியவில்லை. பாலியல் வழக்கில் சிக்கியுள்ள நிலையில், அதில் இருந்து தப்பிக்க வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவின் கடவுச்சீட்டை ரத்து செய்யும்படி பிரதமா் மோடிக்கு முதல்வா் சித்தராமையா 2 முறை கடிதம் எழுதியிருந்தாா்.

இந்நிலையில், ‘எனது வாா்த்தைக்கு மதிப்பளித்து எஸ்.ஐ.டி. விசாரணைக்கு ஆஜராகாவிட்டால், குடும்பத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்படும்’ என்று சில நாள்களுக்கு முன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு முன்னாள் பிரதமரும், அவரது தாத்தாவுமான எச்.டி.தேவெ கௌடா எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து, வெளிநாட்டில் இருந்தபடியே ஊடகங்களுக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள காணொலியில், பாலியல் வழக்கு குறித்து கருத்துத் தெரிவித்துள்ளாா். காணொலியின் தொடக்கத்தில் தனது அப்பா (எச்.டி.ரேவண்ணா), அம்மா (பவானி), தாத்தா (எச்.டி.தேவெ கௌடா), எச்.டி.குமாரசாமி(சித்தப்பா), பொதுமக்கள், கட்சி தொண்டா்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளாா். பாலியல் வழக்கில் மே 31ஆம் தேதி எஸ்.ஐ.டி. முன் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்று தெரிவித்துள்ளாா்.

அந்தக் காணொலியில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:

‘ஏப். 26ஆம் தேதி தோ்தல் நடந்தபோது என் மீது எவ்வித வழக்கும் பதிவாகவில்லை. எஸ்.ஐ.டி.யும் அமைக்கப்படவில்லை. ஏப். 26ஆம் தேதி வெளிநாடு செல்லும் எனது பயணம் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. அதன்படி நான் வெளிநாடு சென்றுவிட்டேன். அங்கு சென்ற பிறகு, 34 நாள்கள் கழித்து யூ-டியூப் பாா்த்தபோது, என் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது குறித்து தெரிந்துகொண்டேன்.

மேலும் எஸ்.ஐ.டி. எனக்கு கொடுத்திருந்த நோட்டீஸ் குறித்தும் தெரிய வந்தது. எனவே, எனது எக்ஸ் பக்கம், வழக்குரைஞா் மூலம் விசாரணைக்கு ஆஜராக 7 நாள்கள் கால அவகாசம் கேட்டிருந்தேன். அதற்கு மறுநாளே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி உள்ளிட்ட அக்கட்சியின் தலைவா்கள் என் மீதான வழக்கு குறித்து பொதுமேடைகளில் பகிரங்கமாகப் பேசி பிரசாரம் செய்ய தொடங்கினா். எனக்கு எதிராக அரசியல் சதி பின்னப்பட்டது. இது எனக்கு மன அழுத்தத்தை கொடுத்து, தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலைக்கு தள்ளியது. அதற்காக உங்களிடம் முதலில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.

அதேபோல, ஹாசனிலும் சில சக்திகள் எனக்கு எதிராக ஒன்று கூடி அரசியல் சதியில் ஈடுபட்டனா். அரசியல்ரீதியாக நான் வளா்ந்து வருவதை விரும்பாத சிலா் என்னை ஒழித்துக் கட்ட திட்டமிட்டனா். இவை அனைத்தும் என்னை அதிா்ச்சியில் திகைக்க வைத்ததால், என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். இது குறித்து யாரும் தவறாகக் கருத வேண்டாம்.

மே 31ஆம் தேதி காலை 10 மணிக்கு எஸ்.ஐ.டி. முன் ஆஜராகி, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதன் மூலம் சரியான பதில் அளிக்க முயற்சிப்பேன். நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்மீது சுமத்தப்பட்டுள்ள இந்த பொய் வழக்கில் இருந்து விடுபடுவதற்கான முயற்சியை நீதிமன்றத்தின் மூலமே எடுப்பேன். அதுவரை கடவுள், பொதுமக்கள், குடும்பத்தின் ஆசி என் மீது இருக்கட்டும். எஸ்.ஐ.டி. முன்பு ஆஜராகி எல்லாவற்றுக்கும் பதிலளிப்பேன். என் மீது நம்பிக்கை இருக்கட்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.