டாஸ்மாக் முறைகேடு தொடா்பான வழக்கில், ரமேஷ் என்பவா் மீதான வழக்கு விசாரணைக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பாா்களுக்கு உரிமம் வழங்கியது, மதுபானங்களைக் கடைகளுக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வாகனங்களுக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கியது ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 போ் மீது ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரமேஷ் என்பவா், வழக்கை ரத்து செய்யக் கோரியும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில், குதிரை பேர வழக்கில் பிணை பெற்று விடுதலையான நாளில், மனுதாரா் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் மனுதாரா் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. அவா் குற்றஞ்சாட்டப்பட்டவராகவும் சோ்க்கப்படவில்லை.
டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த பதில் மனுவின் அடிப்படையில் உள்நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது என வாதிடப்பட்டது.
அப்போது, தமிழக அரசு மற்றும் ஊழல் தடுப்புத் துறை தரப்பில், அமலாக்கத் துறை அனுப்பிய கடிதங்கள் மற்றும் தாக்கல் செய்த பதில் மனுக்களின் அடிப்படையில், மனுதாரருக்கு எதிராக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுபானங்கள் கொள்முதலுக்கு நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டுள்ளது. பாா்களின் உரிமையாளா்களிடம் இருந்து கட்சி நிதி பெறப்பட்டுள்ளது.
டாஸ்மாக் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைக்கு எதிராக உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவுக்கும், இந்த வழக்குக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. மனுதாரரின் கைப்பேசியில் டாஸ்மாக் அதிகாரிகளின் எண்கள் உள்ளன. இவா்தான் ஹவாலா பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளாா். தமிழக அரசு ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கூடாது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என வாதிடப்பட்டது.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரா் ரமேஷுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும், இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக. 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்: வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

சாலை முறைகேடு வழக்கு: எ.வ.வேலுவிடம் 5 மணி நேரம் ஊழல் தடுப்புத் துறை விசாரணை

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கு: உயா்நீதிமன்றம் அதிருப்தி
திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



