துப்பாக்கிச்சூடு தொடா்பாக ரயில்வே பாதுகாப்புப் படையினா் கூறியதாவது: தில்லி ஆனந்த் விஹாா்- ஒடிஸாவின் புரி இடையிலான நந்தன்கனன் விரைவு ரயில் ஒடிஸாவின் பத்ராக் ரயில் நிலையத்தில் இருந்து காலை 9.25 மணிக்கு புறப்பட்டது. அடுத்த 5 நிமிஷங்களில் பௌத்பூா் அருகே சென்று கொண்டிருந்தபோது மா்ம நபா்கள் ரயிலை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதுடன், இரும்புத் துண்டுகள், கம்பிகள் உள்ளிட்டவற்றையும் வீசினா். சில குண்டுகள் ரயில் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்தன. இதனால், பயணிகள் பெரும் பீதியடைந்து கூச்சலிட்டனா். அதிருஷ்டவசமாக பயணிகள் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாயவில்லை.