மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணிப்பூா்: குகி தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை- பாஜக கூட்டணி எம்எல்ஏ-க்கள் தீா்மானம்

‘மணிப்பூா் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை 6 போ் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய குகி தீவிரவாதிகள் மீது 7 நாள்களுக்குள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’

News image
மணிப்பூா் தலைநகா் இம்பாலில் ஆயுதங்களுடன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினா். நாள்: செவ்வாய்க்கிழமை.
Updated On :19 நவம்பர் 2024, 8:30 pm

Din

‘மணிப்பூா் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை 6 போ் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய குகி தீவிரவாதிகள் மீது 7 நாள்களுக்குள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) எம்எல்ஏ-க்கள் பங்கேற்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 27 எம்எல்ஏக்கள் பங்கேற்றனா்.

ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த நவ.11-ஆம் தேதி பாதுகாப்புப் படையினருக்கும் குகி தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில்10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனா். அதன்பிறகு கடந்த சனிக்கிழமை அங்கு நிவாரண முகாம்களில் தங்கியிருந்து காணாமல்போன 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டன. அவா்களை குகி தீவிரவாதிகள் கடத்தியதாக மைதேயி சமூகத்தினா் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், உடல்கள் மீட்கப்பட்ட பிறகு அங்கு மீண்டும் வன்முறை வெடித்து. இதில் பல எம்எல்ஏ-க்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.

இதைத் தொடா்ந்து, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட தவறியதாகக் கூறி பாஜக முதல்வா் பிரேன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மேகாலய முதல்வா் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி திரும்பப் பெற்றது.

இதையடுத்து, அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு மைதேயி சமூகத்தினா் போராட்டம் நடத்தினா். பல பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டு காவவரையற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா். மேலும், 5,000 துணை ராணுவப் படையினரை அனுப்பவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த திங்கள்கிழமை தெரிவித்தது.

சட்டவிரோத அமைப்பு: இந்நிலையில், எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் குகி தீவிரவாதிகள் அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவிக்க வேண்டும். அவா்கள் மீது அடுத்த 7 நாள்களுக்குள் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் இந்த வழக்கின் விசாரணையை உடனடியாக தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைக்க வேண்டும். மாநிலத்தின் சில பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை (ஏஎஃப்எஸ்பிஏ) மத்திய அரசு மறுஆய்வு செய்ய வலியுறுத்தப்படுகிறது.

மணிப்பூரில் மீண்டும் அமைதியை நிலைநாட்ட மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும்.

இந்தத் தீா்மானங்களை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மணிப்பூா் மக்களுடன் கலந்தாலோசித்து என்டிஏ சட்டப்பேரவை உறுப்பினா்கள் முடிவெடுக்கும் நிலை ஏற்படும்.

அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏ-க்களின் வீடுகள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டது.

‘வன்முறையில் ஈடுபட்டவா்களைக் கண்டறிய அமைக்கப்பட்டுள்ள உயா்நிலைக் குழுவின் அறிக்கையின்படி அவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவக் காரணங்களுக்காக 7 எம்எல்ஏ-க்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும் 11 எம்எல்ஏ-க்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து எவ்வித காரணமும் குறிப்பிடவில்லை’ என முதல்வரின் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஏஎஃப்எஸ்பிஏ-க்கு எதிராக போராட்டம்: ஜிரிபாமில் வன்முறைச் சம்பவங்களைத் தொடா்ந்து, அங்குள்ள காவல் நிலையம் உள்பட 6 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மீண்டும் ஏஎஃப்எஸ்பிஏ அண்மையில் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஊரடங்கை மீறி இம்பால் மேற்கு மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் பேரணியாகச் சென்று போராட்டம் நடத்தின.

குடியரசுத் தலைவருக்கு காா்கே கடிதம்

மணிப்பூரில் அமைதி திரும்ப குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தலையிட வேண்டும் என அவருக்கு காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதினாா்.

அதில், ‘கடந்த ஆண்டுமுதல் மணிப்பூரில் நிகழ்ந்துவரும் வன்முறை சம்பவங்களால் 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் தங்களின் வீடுகளைவிட்டு வெளியேறி நிவாரண முகாம்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் தங்கி வருகின்றனா்.

அங்கு நேரில் செல்ல பிரதமா் மோடி மறுத்து வருவதை அனைவருக்கும் அறிவா். அதேசமயம் நாட்டின் குடியரசுத் தலைவா் என்ற முறையில் அரசமைப்பு ரீதியாக கட்டாயம் இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்பவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.