
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. இதில், காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வத்ரா, மக்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.
மக்களவை உறுப்பினராகியிருக்கும் பிரியங்கா காந்தி, பதவியேற்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்த பிரியங்கா காந்தி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை விட 4 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வந்த பிரியங்கா, முதல் முறையாக போட்டியிட்ட தேர்தலிலேயே இமாலய வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தார்.
52 வயதாகும் பிரியங்கா காந்தி வத்ரா, கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இன்று மக்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே, மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராகியிருந்தார். இவர் இதற்கு முன்பு ரே பரேலி மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார். இதற்கிடையே, ரே பரேலி தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக ராகுல் உள்ளார்.
எனவே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகன், மகள் என மூவரும் இன்று முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக அமர்ந்திருக்கிறார்கள். காந்தி குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பது இதுவே முதல் முறை என்கின்றன தரவுகள்.
கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் வென்றதன் மூலம் வயநாடு மக்களின் பிரதிநிதியாக மாறியிருக்கும் பிரியங்கா, அதனை குறிக்கும் வகையில், பருத்தி ஆடை என்று அழைக்கப்படம் கசவு புடவையில் இன்று மக்களவைக்கு வந்தார்.
கேரள மக்களின் பாரம்பரிய ஆடையாக விளங்கும் சந்தன நிற புடவையில், சரிகை பார்டர் இடம்பெற்றிருக்கும் ஆடை அணிந்துகொண்டு வந்து மக்களவையில் உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டார்.
மக்களவை உறுப்பினராகப் பதவியேற்கும்போது, தனது கையில் அரசமைப்புப் புத்தகத்தையும் கையில் வைத்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.