/

பெண் மருத்துவா் கொலைச் சம்பவம்: விரைவான நீதி கேட்டு சிபிஐ அலுவலகத்தை நோக்கி பேரணி

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவத்தில், விரைவான நீதி கேட்டு சிபிஐ அலுவலகத்தை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி மேற்கொண்டனர்.

News image

கோப்புப்படம். - ANI

Updated On :12 அக்டோபர் 2024, 7:11 pm IST

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவத்தில், விரைவான நீதி கேட்டு சிபிஐ அலுவலகத்தை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி மேற்கொண்டனர்.

சால்ட் லேக்கில் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தை நோக்கி புறப்பட்ட பேரணியில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். தொடர்ந்து பேரணியின் போது எங்களுக்கு நீதி வேண்டும் என முழக்கங்களை எழுப்பியவாறு அவர்கள் சென்றனர்.

பின்னர் பேரணியாகச் சென்றவர்களில் 5 பிரதிநிதிகள் சிபிஐ அலுவலகத்திற்குள் சென்று கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். முன்னதாக பேரணியையொட்டி சி.ஜி.ஓ வளாகத்தில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தை நெருங்கும் சாலைகளில் போலீஸார் தடுப்புகளை அமைத்து பாகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகக் காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட சிபிஐ, அண்மையில் கொல்கத்தா நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அந்தக் குற்றப் பத்திரிகையில், ‘கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் உடலில் இருந்து சஞ்சய் ராயின் மரபணு கண்டறியப்பட்டது. பெண் மருத்துவரின் உடலில் இருந்து சிந்திய ரத்தக் கறைகள், சஞ்சய் ராயின் ஆடை மற்றும் காலணியில் இருந்தன’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதுபோல சஞ்சய் ராய்க்கு எதிராக 11 ஆதாரங்களை குற்றப் பத்திரிகையில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.