ஐ.நா. செயலர் அவமதிப்பு: இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாடு - காங். தலைவர்கள் கண்டனம்!

இஸ்ரேலுக்கு எதிரான கடிதத்தில் இந்தியா முதல் நாடாக கையெழுத்திட்டிருக்க வேண்டும்! -ப. சிதம்பரம்
Democracy
Democracy
Published on
Updated on
1 min read

ஐ. நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸை தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழையவிடாமல் அவமதிக்கும் விதத்தில் இஸ்ரேல் அரசு செயல்பட்டுள்ளதற்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன.

இதையடுத்து, ஐ. நா. அவையில் இஸ்ரேலுக்கு எதிராக முன்மொழியப்பட்டுள்ள கடிதத்துக்கு பிரேஸில், கொலம்பியா, தென்னாப்பிரிக்கா, ஆப்பிரிக்க யூனியன், தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா, தெற்காசிய மற்றும் மேற்காசிய பிராந்தியங்களைச் சேர்ந்த பெரும்பாலான நாடுகள் என மொத்தம் 105 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த நிலையில், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகள் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை, மேற்கண்ட கண்டனக் கடிதத்தில் கையெழுத்திடாமல் தவிர்த்தும் விட்டன. எனினும், இந்த விவகாரம் குறித்து வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சகம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

இதையடுத்து, இஸ்ரேல் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ‘ஐ. நா. பொதுச் செயலரை மரியாதைக் குறைவாக நடத்திய இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்து கையெழுத்திட்ட 104 நாடுகளுடன் இணைந்து இந்தியா கையெழுத்திடாத இச்செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த நடவடிக்கை மூலம், பிரிக்ஸ் கூட்டமைப்பிலுள்ள உறவு நாடுகளான பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா மட்டுமல்லாது, நட்புறவுடன் திகழும் தெற்காசியா, மேற்காசியா மற்றும் ஆப்பிரிக்கா பிராந்தியங்களைச் சேர்ந்த பல நாடுகளுடனான உறவுகளை முறித்துக்கொள்ளும் இந்தியாவின் நடவடிக்கையாகவே இதைக் கருத முடியும்.

ஐ. நா. பொதுச் செயலர் எவ்வித சார்புநிலைக்கும் அப்பாற்பட்டதொரு தலைமை. அரசியல் வேற்றுமைகளைக் களைய நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஒரேயொரு சர்வதேச அமைப்பு ஐ. நா. மட்டுமே.

அப்படியிருக்கையில், ஐ. நா. பொதுச் செயலரை இஸ்ரேலுக்குள் அனுமதிக்காமல் தடுத்திருப்பதன் மூலம் இஸ்ரேல் முற்றிலும் தவறிழைத்துவிட்டது.

இந்த நிலையில், இவ்விவகாரத்தில் இந்தியா முதல் உறுப்பினராக கையெழுத்திட்டிருக்க வேண்டும்’ எனப் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான சசி தரூர் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில், ‘ஐ. நா. அமைப்பின் தீவிர ஆதரவாளராக திகழ்வதை இந்தியா பெருமையாகக் கொண்டு வந்துள்ளது. அப்படியிருக்கையில், ஐ. நா. பொதுச் செயலரைத் தடை செய்துள்ள உறுப்பினர் நாட்டின்(இஸ்ரேல்) தவறான நடவடிக்கையை நாம்(இந்தியா) எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

104 நாடுகளுடன் இணைந்து இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக அந்த நாடுகளுடன் நாம் ஏன் இணையவில்லை?’ எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com