
பனாஜி(கோவா): மக்களின் மன்றமாக செயல்படுவதே உச்சநீதிமன்றத்தின் கடமையாகும் என தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார்.
கோவாவில் இன்று(அக். 19) நடைபெற்ற உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் மாநாட்டில் தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் பேசியதாவது, “கடந்த 75 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டு வந்துள்ள உச்சநீதிமன்றத்தின் நீதிப் பாதையிலிருந்து நாம் விலகிச் செல்லலாகாது. மக்களின் நீதிமன்றமாக உச்சநீதிமன்றம் திகழ்ந்தாலும், எதிர்க்கட்சிகளின் கடமையை நாம் ஆற்ற வேண்டுமெனக் கூறக் கூடாது.
மக்களின் மன்றமாக செயல்பட வேண்டுமென்பதே உச்சநீதிமன்றத்தின் கடமை. இது இனி வருங்காலங்களிலும் கடைபிடிக்கப்பட வேண்டும். அதேநேரம், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுவது போல எதிர்க்கட்சிகளின் கடமைகளை உச்சநீதிமன்றம் செய்ய முடியாது.
இன்றைய காலக்கட்டத்தில், தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டால் உச்சநீதிமன்றத்தை சிறந்ததொரு அமைப்பாகவும், தங்களுக்கெதிராக தீர்ப்பளிக்கப்பட்டால் உச்சநீதிமன்றத்தை விமர்சிப்பதையும் பார்க்க முடிகிறது.இது ஆபத்தானது. தீர்ப்புகள் மூலம், உச்சநீதிமன்றத்தின் செயல்பாட்டை கணிக்கவோ எடை போடவோ கூடாது.
தனிப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமகவோ அல்லது எதிராகவோ வரலாம். வழக்குகளைப் பொறுத்து, நீதிபதிகள் சுதந்திரமான அணுகுமுறையுடன் முடிவெடுக்கிறார்கள். அதேநேரத்தில், தீர்ப்புகளில் தவறு இருப்பின் சுட்டிக்காட்டலாம்.
உச்சநீதிமன்றம் பணக்காரர்கள் தொடர்புடைய வழக்குகளை மட்டுமே கையாள்வதாக களத்தில் ஒரு கண்ணோட்டம் பரவலாக நிலவியது. நீதிமன்ற அமைப்புகளுக்கு வெளியே இருந்து பார்க்கும் மக்களுக்கு உள்ளே நடப்பது குறித்து அறிந்துகொள்ள முடியதென்பதால், உச்சநீதிமன்றத்தின் மீது குற்றச்சாட்டை சுமத்துவது எளிதானது.
ஆனால், நீதிமன்ற நடைமுறைகள் தற்போது நேரலையாக ஒளிபரப்பப்படுவது முக்கிய திருப்புமுனையாக விளங்குகிறது. நேரலை ஒளிபரப்பானது இவையனைத்தையும் மாற்றியுள்ளது.
ஏனெனில், மக்களின் மிகச்சிறிய பிரச்னைகள் கூட(முன் ஜாமீன் மனு உள்ளிட்டவை கூட), சாமானிய மனிதர்களின் பிரச்னைகள் கூட உச்சநீதிமன்றத்தால் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பது இப்போது மக்களுக்கு தெரியும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.