
சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயை சுட்டுக் கொல்பவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெகுமதி
மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலைக்கு பொறுப்பேற்று சிறையில் அடைக்கப்பட்ட கும்பல் லாரன்ஸ் பிஷ்னோய்யை கொல்லும் காவல்துறை அதிகாரிக்கு வெகுமதி அளிப்பதாக க்ஷத்ரிய கர்னி சேனை அமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து க்ஷத்ரிய கர்னி சேனையின் தேசியத் தலைவர் ராஜ் ஷெகாவத், “லாரன்ஸ் பிஷ்னோய்யைக் கொல்லும் எந்த ஒரு காவல்துறை அதிகாரிக்கும் ரூ.1,11,11,111 வெகுமதியாக வழங்கப்ப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
பாபா சித்திக் சுட்டுக்கொலை
முன்னதாக, கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் பாபா சித்திக்கை மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கோ் நகரில் தனது மகனும் எம்எல்ஏவுமான ஸீஷான் சித்திக்கின் அலுவலகத்துக்கு வெளியே இரவு மூன்று போ் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டனா். இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாகத் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இந்த வழக்கில், கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் ஹரியாணாவைச் சோ்ந்த குா்மைல் பல்ஜீத் சிங், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த தா்மராஜ் ராஜேஷ் காஷ்யப் ஆகியோரை காவல் துறை, உடனடியாக கைது செய்தனர். பாபா சித்திக் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
லாரன்ஸ் பிஷ்னாய் உயிருக்கு வெகுமதி ஏன்?
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட லாரன்ஸ் பிஷ்னாய் தற்போது குஜராத்தில் உள்ள சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கி சூடு நடத்திய வழக்கிலும் அவர் பெயரும் குறிப்பிடப்பட்டது. ஆனால், காவல்துறையினர் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
க்ஷத்ரிய கர்னி சேனையின் தேசியத் தலைவர் ராஜ் ஷெகாவத் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு விடியோவில், “லாரன்ஸ் பிஷ்னோய், எங்களது அமர் ஷஹீத் சுக்தேவ் சிங் கோகமேடிஜியை கொன்றவன். அதனால், அவரது உயிருக்கு வெகுமதி வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று கர்னி சேனையின் தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி, அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் அவரது கொலைக்கு பொறுப்பேற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.