

குஜராத்தில் இந்திய ராணுவ விமானங்களை தயாரிக்கும் டாடா விமான உற்பத்தி ஆலையை பிரதமர் மோடியும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இணைந்து திங்கள்கிழமை திறந்து வைத்தனர்.
குஜராத் மாநிலம், வதோதராவில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த ஆலை, இந்திய ராணுவத்துக்கான விமானங்களை தயாரிக்கும் நாட்டின் முதல் தனியார் விமான உற்பத்தி ஆலையாகும்.
இந்த நிறுவனத்தை கட்டுவதற்கு கடந்த 2022ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியிருந்தார்.
இன்று காலை வதோதராவுக்கு வருகை தந்த மோடியும், பெட்ரோ சான்செஸும் வாகனப் பேரணியில் பங்கேற்றனர். இவர்களுக்கு வதோதரா மக்கள் சாலைகளின் இருபுறங்களிலும் கூடி வரவேற்பு அளித்தனர்.
பின்னர், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிட். வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டாடா விமான ஆலையத்தை இருவரும் இணைந்து திறந்து வைத்தனர்.
இந்த ஆலையில், ராணுவ பயன்பாட்டுக்கான சி-295 ரக விமானங்கள் தயாரிக்கப்படவுள்ளது. மொத்தம் 56 சி-295 விமானங்கள் வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதில், 16 விமானங்களை ஸ்பெயினின் ஏர் பஸ் நிறுவனம் நேரடியாக வழங்கவுள்ளது. மீதமுள்ள 40 விமானங்களை உள்நாட்டு தயாரிப்பாக டாடா ஆலையில் தயாரிக்கவுள்ளனர்.
மேலும், இந்த விமான தயாரிப்புக்கு பாரத் நிறுவனமும் பங்களிப்பை வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.