மணிப்பூரில் வன்முறையை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி பெண்கள் பேரணி
மணிப்பூரில் வன்முறையைக் கண்டித்து நூற்றுக்கணக்கான பெண்கள் சாலைகளில் தீப்பந்தம் ஏந்தியபடி பேரணியாகச் சென்றனர்.
மணிப்பூரில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது, பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க முன்னெச்சரிக்கையாக, அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் ட்ரோன்-எதிர்ப்பு அமைப்புகளை மணிப்பூரில் நிறுவி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ட்ரோன்-எதிர்ப்பு துப்பாக்கிகள் மாநிலத்துக்கு வரவழைக்கப்பட்டு, மத்திய ரிசர்வ் காவல் படை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ட்ரோன் தாக்குதல்களைக் கண்டித்து தலைநகர் இம்பால் நகரின் தாங்க்மேய்பேண்ட் பகுதியில் திங்கள்கிழமை(செப். 9) நூற்றுக்கணக்கான பெண்கள் சாலைகளில் தீப்பந்தம் ஏந்தியபடி பேரணியாகச் சென்றனர். அவர்களை காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைந்து போகச் செய்ததால் பதற்றமான சூழல் நிலவியது.
முன்னதாக இம்பாலில் திங்கள்கிழமை(செப். 9), பள்ளி, கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு பேரணியாக சென்றதால் பரபரப்பான சூழல் நிலவியது. அவர்கள் மணிப்பூர் ஆளுநர், காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோர் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மேலும், மணிப்பூரில் உள்ள துணை ராணுவப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டுமென்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.