ஆன்லைன் மோசடி அறிகுறிகள்: வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் ஐசிஐசிஐ வங்கி!

வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் வகையில் ஆன்லைன் மோசடிகளிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகளை அறிவித்தது ஐசிஐசிஐ வங்கி.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துவரும் நிலையில், வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் வகையிலான தற்காத்துக்கொள்ளும் வழிகளை ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.

நம்பகத்தன்மை வாய்ந்த நிதி நிறுவனங்கள் அல்லது வணிக நிறுவனங்களிலிருந்து வரும் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் வாயிலாக வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர். இதில் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணமும் கொள்ளையடிக்கப்படுகின்றன.

இந்நிலையில், வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் வகையில் ஐசிஐசிஐ நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நம்பகத்தன்மை வாய்ந்த நிதி அல்லது ஆன்லைன் வணிக நிறுவனங்களில் இருந்து மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி அனுப்புவதைப் போன்று சில லிங்குகளை அனுப்பி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு மற்றும் பற்று அட்டை (டெபிட் கார்டு) விவரங்களை மர்ம நபர்கள் கொள்ளையடிக்கக்கூடும்.

இதில் பயனர் ஐடி, கடவுச்சொல், யூஆர்என், பற்று அட்டை எண், அட்டையின் பின்புறமுள்ள தகவல்களான காலாவதி தேதி மற்றும் ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) ஆகியவற்றைத் திருட முயற்சிக்கின்றனர்.

மோசடி முயற்சிக்கான அறிகுறிகள்

ஆன்லைன் மோசடிகளை அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் தனது வாடிக்கையாளர்களுக்கு சில முக்கியக் குறிப்புகளை ஐசிஐசிஐ வங்கி வழங்கியுள்ளது.

  • அடையாளம் தெரியாத இணையதளங்களிலிருந்து மின்னஞ்சல்கள், அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் வங்கிக் கணக்கு தகவல்கள் கோரப்படுவது மோசடிக்கான முயற்சி.

  • போலியான மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்திக்கு வங்கியின் மின்னஞ்சல் முகவரி, இணைய முகவரி, இலச்சினை போன்றவற்றை பயன்படுத்தி உண்மையானதைப் போன்ற மோசடியில் ஈடுபடுபவர்கள் வழங்குவார்கள்.

  • இதுபோன்ற போலி மின்னஞ்சல்கள் பெரும்பாலும் 'அன்புள்ள வாடிக்கையாளரே', 'அன்புள்ள வங்கி வாடிக்கையாளரே', 'அன்புள்ள இணைய பரிவர்த்தனை வாடிக்கையாளரே', என்றே குறிப்பிட்டிருக்கும்.

  • உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் லிங்குகள் சிலநேரங்களில் உண்மையானதைப் போன்றே இருக்கும். ஆனால், அந்த லிங்கின் மீது சுட்டி அம்புக்குறியை (Cursor) வைத்தால், லிங்கின் கீழ் அடிக்கோடு ஒன்று தோன்றும்.

வங்கி வாடிக்கையாளர்கள் இதுபோன்ற மோசடி லிங்குகளை பெற நேர்ந்தால், உடனடியாக cybercrime.gov.in என்ற இணைய முகவரியில் தேசிய சைபர் கிரைமில் புகார் அளிக்கலாம் அல்லது 1930 என்ற உதவி எண்ணுக்குத் தொடர்புகொண்டு புகாரைப் பதிவு செய்யலாம் அல்லது ஐசிஐசிஐ வங்கி உதவி எண்ணுக்குத் தொடர்புகொள்ளலாம். (ஐசிஐசிஐ வங்கி உதவி எண்: 18002662)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com