'இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை ஏற்க பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமார் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற கூட்டணி கட்சித் தலைவர்களின் காணொலி கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை ஏற்க மறுத்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இதையும் படிக்க | ஜன.14, 15-ல் சபரிமலைக்கு பெண்கள்,குழந்தைகளுக்கு கட்டுப்பாடு
மேலும் "காங்கிரஸ் கட்சியில் இருந்து யாரேனும் ஒருவர் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும்" என்று நிதீஷ் குமார் கூறியதாக சொல்லப்படுகிறது.
2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் இதுவரை 4 முறை நேரில் சந்தித்து ஆலோசித்துள்ளனர்.
கடைசியாக புதுதில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனவரி இரண்டாவது வாரத்துக்குள் தொகுதி பங்கீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. அதேபோல், கூட்டணிக்கான ஒருங்கிணைப்பாளரை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் இன்று (ஜன.13) நடைபெற்ற கூட்டணி கட்சித் தலைவர்களின் காணொலி கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை ஏற்க நிதீஷ் குமார் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டம்: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
இதற்கிடையில் இந்தியா கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.