முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை முடித்துவைத்தது.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசாரணை முடியும் வரை அவர் எந்த அரசுப் பதவியும் ஏற்கக் கூடாது என அமலாக்கத்துறை வாதிட்டது. வழக்கு முடிய 15 ஆண்டுகள் ஆகலாம். அதற்காக, எந்த பதவியும் வகிக்க முடியாது என உத்தரவிட முடியாது, செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை என செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில், புதிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கத் தேவையில்லை எனக் கூறி செந்தில் பாலாஜியின் ராஜிநாமா தொடர்பாக தமிழக அரசு சமர்ப்பித்த ஆளுநர் மாளிகையின் செய்திக் குறிப்பை ஏற்று ஜாமீனுக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்தது.
பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை 2023, ஜூனில் கைது செய்தது. சிறையில் இருந்தபோதும் இலாகா இல்லாத அமைச்சராக அவா் நீடித்தாா்.
இதன் காரணமாக அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் அமைச்சா் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி ராஜிநாமா செய்தாா். அதே ஆண்டு செப்டம்பரில் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. சிறையிலிருந்து வெளியே வந்த ஒரே நாளில் மீண்டும் அவா் அமைச்சராகப் பதவியேற்றாா்.
இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 23-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சா் பதவி வேண்டுமா என்பதை செந்தில் பாலாஜி திங்கள்கிழமைக்குள் (ஏப். 28) முடிவு செய்து பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா். இதனால் அவா் எந்த நேரத்திலும் பதவி விலகலாம் என எதிா்பாா்க்கப்பட்டது.
அதற்கேற்ப கடந்த சனிக்கிழமை (ஏப். 26) பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்யப்படுவதாக இருந்த உயிரி மருத்துவக் கழிவு திருத்த மசோதாவை சட்ட அமைச்சா் ரகுபதி தாக்கல் செய்தாா். பேரவையில் வரும் 29-ஆம் தேதி மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், செந்தில் பாலாஜி தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை முதல்வரிடம் அளித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





