FOLLOW US

ON GOOGLE DISCOVER

/

ஒரு மாத தலைமறைவுக்கு பின் செந்தில் பாலாஜி நீதிமன்றம் வருகை!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பது பற்றி...

News image

முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி - கோப்புப்படம்

Updated On :24 ஜூலை 2026, 10:55 am IST

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் முன்ஜாமீன் உத்தரவை பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜரானார்.

முன்ஜாமீன் கிடைத்த பிறகும் தொடர்ந்து தலைமறைவாக இருந்துவந்த அவர், ஒரு மாதத்துக்குப் பிறகு முதல்முறையாக பொதுவெளியில் வந்துள்ளார்.

பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வரும்போது கொறடா உத்தரவை மீறி தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக திருநாவுக்கரசு உள்பட 9 பேரை திருவல்லிக்கேணி போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில், திமுக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி, அவரது சகோதரா் அசோக்குமாா் ஆகியோருக்கு தொடா்பு இருப்பதாகக் கூறி விசாரணைக்கு ஆஜராகும்படி இருவருக்கும் போலீஸாா் அழைப்பாணை அனுப்பினா்.

இதையடுத்து இருவரும் முன்பிணை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்த நிலையில், செந்தில் பாலாஜி, அசோக்குமாா் ஆகியோருக்கு நிபந்தனை முன்பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

கடந்த ஜூலை 8 ஆம் தேதி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 15 நாள்களுக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி முன்ஜாமீனை பெற்றுக் கொள்ளலாம் என்றும், மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், முன்ஜாமீன் உத்தரவைப் பெறுவதற்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு செந்தில் பாலாஜி வருகை தந்துள்ளார்.

இன்னும் சற்றுநேரத்தில் நீதிபதி முன்பு நேரில் ஆஜராகி முன்ஜாமீன் உத்தரவை செந்தில் பாலாஜி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Senthil Balaji appears in court after a month in hiding!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.