
மணிப்பூர் மாநிலத்தில், குடியரசுத் தலைவரின் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் தீர்மானத்துக்கு, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில், கடந்த பிப்ரவரி முதல் குடியரசுத் தலைவரின் ஆட்சியானது அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், அதனை ஆகஸ்ட் 13 முதல் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
பிகாரில் நடைபெறும் தேர்தல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் சூழலில், மணிப்பூர் குறித்த தீர்மானமானது கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று (அக.5) அந்தத் தீர்மானமானது மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்க்கட்சி எம்.பிகளின் தொடர் கேள்விகளுக்கும், கோஷங்களுக்கும் இடையில் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், மணிப்பூரில் இரு சமூகத்துக்கு இடையிலான மோதலானது நீதிமன்றத்தின் தீர்ப்பினால் உருவானது எனக் கூறினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
“மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையிலான மோதலானது, இடஒதுக்கீடு குறித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து உருவானது. இதனை, சிலர் மதக்கலவரம் எனக் கூறுவது தவறு” என அவர் பேசியுள்ளார்.
மேலும், மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று பார்வையிட்டதாகவும், குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது முதல் ஒரேயொரு வன்முறைச் சம்பவம் மட்டுமே நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, மணிப்பூரின் முன்னாள் முதல்வர் பிரேன் சிங் கடந்த பிப்ரவரி மாதம் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதன்பின்னர், அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.