
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியாவுக்கு வருகைதர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து வருகிறார்.
ரஷியாவிடம் எண்ணெய் வாங்கி வரும் இந்தியா மீது 50 சதவிகித வரியையும் டிரம்ப் விதித்துள்ளார்.
இந்த நிலையில், இந்தியாவுக்கு இம்மாத இறுதிக்குள் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வருகைதர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, வெளிநாடுகளுக்குச் செல்வதை பெரும்பாலும் புதின் தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ரஷியா சென்றிருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அதிபர் புதினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் (Interfax) கூறியுள்ளது. இருப்பினும், மத்திய அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் இன்னும் பெறப்படவில்லை.
மேலும், இம்மாத இறுதி நேரத்தில்தான் பிரதமர் நரேந்திர மோடி, சீனாவுக்கு செல்லவுள்ளார். ஆகையால், அதற்கேற்றாற்போல தேதியும் மாற்றியமைக்கப்படலாம்.
ரஷியாவிடம் நீண்டகாலமாகவே கச்சா எண்ணெய் வாங்கி வரும் இந்தியா உள்பட மற்றைய நாடுகளுக்கும் டிரம்ப் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்ததையடுத்து, ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் சில இந்திய நிறுவனங்கள், தங்கள் வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டன. இருப்பினும், முழுமையாக நிறுத்தப்படவில்லை.
இந்தியாவுக்கு முதலில் 25 சதவிகிதம் வரி விதித்த டிரம்ப், தொடர்ந்து மேலும் 25 சதவிகிதம் வரி விதித்தார்.
டிரம்ப்பின் இந்த வரி நடவடிக்கையானது, இந்தியா மட்டுமின்றி உலக பொருளாதார நாடுகளிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இந்த நிலையில்தான், இந்தியாவின் உற்ற தோழனாக இருந்துவரும் ரஷியாவின் அதிபர் புதின் வருகைதருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.