
இரு நாள் சுற்றுப்பயணமாக சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி திங்கள்கிழமை மாலை தில்லி வந்தடைந்தார்.
மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், தில்லி விமான நிலையத்துக்கு நேரில் சென்று அவரை வரவேற்ற நிலையில், இன்னும் சற்றுநேரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து வாங் யி பேசவுள்ளார்.
அதன்பிறகு தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவலை செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் சந்தித்து எல்லை விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறாா். அதைத்தொடா்ந்து மாலை 5.30 மணியளவில் பிரதமா் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறாா் எனத் தெரிவிக்கப்பட்டது.
சீனாவின் தியான்ஜின் நகரில் ஆக. 31, செப்.1 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க பிரதமா் மோடி சீனா செல்வாா் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், மோடி-வாங் யி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உறவை வலுப்படுத்தும் முயற்சி!
கல்வான் பள்ளத்தாக்கில் 2020-இல் இந்திய-சீன படைகளிடையே மோதல் ஏற்பட்ட பின் 5 ஆண்டுகளாக இருநாடுகளிடையேயான இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படைகளை விலக்கிக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையொப்பமிட்டன. இதையடுத்து, இருதரப்பு உறவுகளைப் புதுப்பிக்கும் தொடா்ச்சியான முயற்சியில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக நிகழாண்டு கைலாசம்-மானசரோவா் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டது. இருநாடுகளிடையேயான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக, இந்திய-சீன எல்லை விவகாரங்கள் தொடா்பான இருதரப்பு சிறப்பு பிரதிநிதிகளின் 23-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. இதில் அஜீத் தோவல் பங்கேற்றிருந்தாா். இதைத்தொடா்ந்து, தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வாங் யீ, 24-ஆவது சுற்று பேச்சுவாா்த்தையில் பங்கேற்கவுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.