

உத்தரப் பிரதேசத்தில் தாலி கட்டுவதற்கு முன்பு ரூ. 20 லட்சம் ரொக்கம் மற்றும் சொகுசுக் கார் பரிசாக அளிக்க வேண்டும் என குடும்பத்தினரை அவதூறாகப் பேசியதால், ஆத்திரமடைந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
தாலி கட்டுவதற்குள் வரதட்சிணையை கொடுத்தாக வேண்டும் என தனது தந்தையையும், சகோதரனையும் விருந்தினர் முன்பும் மணமகன் அவமானப்படுத்தியதால் மணமகள் இந்த முடிவை எடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் விடிந்தால் திருமணம் நடைபெறவிருந்த மணமகள் திருமணமே வேண்டாம் என மறுத்துள்ளார்.
விடிந்தால் திருமணம் என்பதால், குதிரை வண்டிக்காக மணமகள் காத்துக்கொண்டிருந்தபோது அங்கு அலங்கரிக்கப்பட்ட வண்டியில் வந்த மணமகன், ரூ. 20 லட்சம் ரொக்கத்தையும் பிரீஸ்ஸா காரையும் வரதட்சிணையாகக் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
இதற்கு முன்பு அவ்வாறு ஏதும் பேசாத நிலையில், திருமணத்திற்கு சிலமணிநேரங்களே இருக்கும்போது வரதட்சிணை கேட்டதால், மணமகளின் தந்தை சமாதானம் பேச முயன்றார். ஆனால், அதனை மணமகன் ஏற்க மறுத்து, வரதட்சிணை கொடுத்தாக வேண்டும் என விருந்தினர் முன்பு அவமானப்படுத்தும்படி பேசியுள்ளார்.
திருமணத்திற்கு தயாராகி காத்துக்கொண்டிருந்த மணமகள், இதனால் ஆத்திரமடைந்து திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
வரதட்சிணை பேராசை பிடித்தவர்களை வேறு எந்தவொரு பெண்ணும் தேர்வு செய்யக் கூடாது என்று குறிப்பிட்டு விடியோவில் பேசியுள்ள மணமகள்,
''என் திருமணத்திற்காக பாரட் வண்டி வரும் எனக் காத்துக்கொண்டிருந்தேன். பின்னிரவு 2 மணியாகியும் வண்டி வரவில்லை. பிறகு மணமகன் வீட்டினர் வந்தனர். எங்களுக்கு ரூ. 20 லட்சம் ரொக்கம், பிரீஸ்ஸா கார் வேண்டும் என உள்ளே கூட வராமல் வாசலில் இருந்தவாறு கேட்டனர். எனது தந்தை அவர்களுடன் பேச முயன்றார். ஆனால், அவர்கள் அதற்கு தயாராக இல்லை. தாலி கட்டுவதற்கு முன்பு வரதட்சிணை வேண்டும் என என் தந்தையை அவமானப்படுத்தினர்.
வரதட்சிணை பேராசை பிடித்தவரை நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். எனது தந்தைக்கும் எனது குடும்பத்துக்கும் மரியாதை கொடுக்கத் தெரியாத நபருடன் எனது எஞ்சிய வாழ்நாள்களை கழிக்க நான் விரும்பவில்லை. வேறு எந்தவொரு பெண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது'' எனப் பேசியுள்ளார்.
இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச காவல் துறை தலையிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இருதரப்பிலும் விசாரணை நடத்தப்படுவதாகவும், முடிவில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாநில காவல் துறை உறுதியளித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் சமீபத்தில் திருமணமாகி 6 வயதில் மகன் உள்ள நிலையிலும், வரதட்சிணைக்காக பெண் ஒருவர் கணவர் மற்றும் மாமியாரால் தீயிட்டு எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | மும்பைக்குச் சென்ற மெஸ்ஸி..! நிகழ்ச்சி நிரல் விவரங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.