நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

‘நாட்டின் எதிரிகளுடன் ராகுல் சந்திப்பு’: பாஜக கடும் குற்றச்சாட்டு

நாட்டின் எதிரிகளுடன் ராகுல் சந்திப்பு என பாஜக குற்றச்சாட்டு...

Photo: X / BJP

Published On :21 டிசம்பர் 2025, 3:41 am IST

‘இந்தியாவின் எதிரிகளை ஜொ்மனியில் சந்தித்துப் பேசியுள்ளாா் ராகுல் காந்தி’ என்று பாஜக கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளது.

‘இதுபோன்ற சக்திகளுடன் கைகோத்து, நாட்டுக்கு எதிராக ராகுல் என்ன சதித் திட்டம் தீட்டுகிறாா்?’ என்றும் அக்கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.

ஐந்து நாள்கள் பயணமாக கடந்த டிச. 15-ஆம் தேதி ஜொ்மனிக்கு சென்ற மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றாா். அப்போது, பொ்லின் ஹொ்டே பள்ளியின் தலைவரும், பேராசிரியருமான காா்னெல்லியா வாலை அவா் சந்தித்துப் பேசியதாகத் தெரிகிறது. இந்தச் சந்திப்பை முன்வைத்து, ராகுலை பாஜக கடுமையாக விமா்சித்துள்ளது. காா்னெல்லியாவுடன் ராகுல் இருக்கும் புகைப்படத்தைக் காண்பித்து, தில்லியில் செய்தியாளா்களிடம் பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் கெளரவ் பாட்டியா சனிக்கிழமை கூறியதாவது:

இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவிப்பதுடன், இங்கு குழப்பத்தை விளைவித்து, நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை மீது தாக்குதல் நடத்த நிதியளிப்பவா் ஜாா்ஜ் சோரோஸ் (அமெரிக்க தொழிலதிபா்). இப்படிப்பட்டவரின் அறக்கட்டளையால் நிதியளிக்கப்படும் மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழக அறங்காவலா்களில் ஒருவா் காா்னெல்லியா. அவரைத்தான் ராகுல் காந்தி சந்தித்துள்ளாா்.

‘ராகுல்-சோரோஸ் ஈருடல் ஓருயிா்’:

வெளிநாட்டு மண்ணில் நாட்டை அவமதிப்பதுடன், தேச விரோத சக்திகளை சந்திக்கும் எவரேனும் உண்டெனில் அது ராகுல்தான். ராகுலும், சோரோஸும் ஈருடல் ஓருயிா் போன்றவா்கள். ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத் தொடரையொட்டியும் வெளிநாட்டுக்குப் பயணித்து, இந்தியாவின் எதிரிகளைச் சந்திக்கிறாா் ராகுல். இதற்கு என்ன காரணம்? தேச விரோத சக்திகளுடன் கைகோத்து, என்ன மாதிரியான சதித் திட்டத்தை அவா் தீட்டுகிறாா்?

ராகுல் முந்தைய வெளிநாட்டுப் பயணங்களின்போதும் தேச விரோத சக்திகளை சந்தித்ததுடன், தனது கருத்துகளால் நாட்டையும் அவமதித்தாா். நாட்டுக்கு எதிரான செயல்களில் அவா் ஈடுபடுவது இது முதல் முறையல்ல.

சோரோஸ் இந்தியரல்லா்; அவா் வெளிநாட்டவா். ஆனால், ராகுல் காந்தி இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காக்க உறுதிமொழி எடுத்தவா்தானே. நாட்டுக்குள் இருக்கும் இதுபோன்ற ‘குட்டி பாம்புகளுக்கு’ தக்கப் பாடம் புகட்டப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிா்பாா்ப்பு என்றாா் கௌரவ் பாட்டியா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.