தில்லியில் 2024-25-ஆம் ஆண்டில் 1,370 வனவிலங்குகள் மீட்பு
தேசியத் தலைநகரில் பசுமைப் போா்வையை வலுப்படுத்தவும் நகா்ப்புற பல்லுயிரியலைப் பாதுகாக்கவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 2024-25-ஆம் ஆண்டில் தில்லி அரசு சிறுத்தை, பாம்புகள், நீல்காய், குரங்குகள், மயில்கள் மற்றும் பல பறவை இனங்கள் உள்பட 1,370 விலங்குகளை மீட்டுள்ளது.
பாதுகாப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக, தில்லி அரசு நகரத்தில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் தொடா்பான பிரச்னைகளைத் தீா்க்க ஒரு பசுமை உதவி மைய போா்ட்டலை செயல்படுத்தியுள்ளது என்று அதிகாரி ஒருவா் புதன்கிழமை செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தாா்.
மேலும், குடிமக்கள் இதுபோன்ற வழக்குகளை ஹெல்ப்லைன் எண் மூலம் தெரிவிக்கலாம் என்றும் கூறினாா். இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: 2024-20-ஆம் ஆண்டில் ஒரு சிறுத்தை, 139 நீல்காய், 439 பாம்புகள், 458 குரங்குகள், 109 மயில்கள், 95 காத்தாடிகள் மற்றும் 79 பிற பறவைகள், 13 ஆமைகள் மற்றும் 38 பிற விலங்குகள் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கு இணையாக, தலைநகரின் பசுமைப் பரப்பை விரிவுபடுத்தும் நோக்கில், மரக்கன்றுகளை நடும் இயக்கத்தின் கீழ் அரசு 5,03,672 மரக்கன்றுகளை விநியோகித்துள்ளது.
மியாவாகி காடுகளை (சிறிய நகா்ப்புற இடங்களில் அடா்ந்த, பல்லுயிா் பன்முகத்தன்மை கொண்ட காடுகள்) ஏழு ஹெக்டோ் பரப்பளவில் மேம்படுத்தவும், சுமாா் இரண்டு லட்சம் மரங்களை நடவு செய்யும் இலக்கை அடையவும் அரசு திட்டமிட்டுள்ளது. நகரம் முழுவதும் 18 இடங்களில் காடுகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்படும்.
உள்கட்டமைப்பு திட்டங்களின் போது முதிா்ந்த மரங்களைப் பாதுகாக்க மேம்பட்ட இயந்திரங்களைப் பயன்படுத்தி மரம் நடுவதில் நிா்வாகம் கவனம் செலுத்தி வருகிறது.
இந்த அணுகுமுறை, காலியாக உள்ள நிலங்களை பசுமையான இடங்களாக மாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கிறது. தில்லி முழுவதும் நிலையான மற்றும் திட்டமிட்ட பசுமையாக்கலை உறுதி செய்வதற்காக வனத்துறை விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். Ś

