
தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 12 லட்சமாக உயர்த்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
அப்போது, வருமான வரி குறித்த முக்கிய அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
புதிய வருமான வரி முறையில் தனிநபர் ஆண்டு வருமான வரி உச்சவரம்பு ரூ. 7 லட்சமாக இருந்த நிலையில், ரூ. 12 லட்சமாக உயர்த்துவதாக தெரிவித்துள்ளார். மேலும், வரிச் சலுகையாக ரூ. 75,000 கழிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுபவர்கள் இனி வரி கட்டத் தேவையில்லை. இதனால் நடுத்தர மக்களின் சேமிப்பு மற்றும் முதலீடுகள் அதிகரிக்கும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
தனிநபர் மாத சம்பளமாக பெறாமல், மூலதன ஆதாயம் உள்பட பிற வகையில் கிடைக்கக் கூடிய வருமானங்களுக்கான வரி சதவிகிதமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
0 - 4 லட்சம் - வரி இல்லை
4 - 8 லட்சம் - 5%
8 - 12 லட்சம் - 10%
12 - 16 லட்சம் - 15%
16 - 20 லட்சம் - 20%
20 - 24 லட்சம் - 25%
24 லட்சத்துக்கு மேல் - 30%
மேலும், வீட்டு வாடகை டிடிஎஸ் பிடித்த வரம்பு ரூ. 6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதியோருக்கான வட்டி வருவாயில் ரூ. ஒரு லட்சம் வரை வருமான வரி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இரண்டு சொந்த வீடுகள் வரை வரிச் சலுகைகள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி விலக்கு அறிவிப்பால், ஆண்டுக்கு நேரடி வரி வருவாய் ரூ. 1 லட்சம் கோடியும், மறைமுக வரி வருவாய் ரூ. 2,600 கோடியும் அரசுக்கு இழப்பு ஏற்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.