
புது தில்லி : தில்லி சட்டப்பேரவைக்கு பிப்.5-ஆம் தேதி நடைபெறும் தோ்தலுக்கான பிரசாரத்தின் இறுதி நாளான திங்கள்கிழமை(பிப். 3) பேசிய தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
அவர் பேசியதாவது, “ராஜீவ் குமார் இம்மாத கடைசியில் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அதன்பின், அவருக்கு என்ன பதவி தரவிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை; ஆனால் அவர் நம் நாட்டை அடமானம் வைக்க தயாராகி விட்டார்.
தேசத்தின் ஜனநாயகத்தை அழிப்பதற்கு ஒத்துழைத்தால் உங்களுக்கு மத்திய அரசிடமிருந்து என்ன பதவி கிடைக்கப் போகிறது? ஆளுநர் பதவியா? அல்லது குடியரசுத் தலைவர் பதவியா?”
“நீங்கள் 45 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறீர்கள். உங்களின் பதவி ஆசைக்காக நாட்டை அடமானம் வைக்காதீர்; பதவி வெறியில் நாட்டின் ஜனநாயகத்துக்கு முடிவுரை எழுதிவிடாதீர்” என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் மீதான விமர்சனங்களுக்கு விளக்கமளிக்கும் விதத்தில் இன்று(பிப். 4) தேர்தல் ஆணையம் தரப்பில் அதன் அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவொன்றில் கூறப்பட்டுள்ளதாவது: ‘தில்லி தேர்தலை மையமாக வைத்து 3 பேர் கொண்ட ஆணையம் மீது அவதூறு பரப்பும் விதத்தில் தொடர்ச்சியாக விமர்சனங்கள் சுமத்தப்படுவதை உற்று நோக்கி வருகிறோம்.
தனிநபர் ஆணையமான இது, இத்தகைய அவதூறு விமர்சனங்களால் திசை மாறாமல், அரசமைப்பு வரம்புக்கு கட்டுப்பட்டு செயலாற்றி வருகிறது.
தில்லி தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளாலும் வேட்பாளர்களாலும் எழுப்பப்பட்டுள்ல புகார்கள் மீது ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகளால் வழிகாட்டு நெறிமுறைகளுக்குள்பட்டு உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், நியாயமான முறையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பது உறுதி செய்யப்படுகிறது’ என்று தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







