
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை இன்று (பிப். 9) ராஜிநாமா செய்தார்.
தலைநகர் இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் அஜய்குமார் பல்லாவை நேரில் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.
மணிப்பூரில் மைதேயி - குகி ஆகிய இரு பழங்குடி சமூகத்தினரிடையே நீடித்துவந்த மோதல் போக்கிற்கு தீர்வு காணத் தவறியதால், முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்த நிலையில், இன்று தனது பதவியை அவர் ராஜிநாமா செய்தார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்து மைதேயி - குகி பழங்குடி சமூகத்தினரிடையே மோதல் போக்கு நீடித்துவருகிறது.
இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பல்வேறு கலவரத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் கொல்லப்பட்டனர். கலவரத்தைத் தற்காலிகமாகத் தடுக்கும் நோக்கத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவையும் பலமுறை துண்டிக்கப்பட்டது. எனினும் பழங்குடி மக்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை.
இந்த விவகாரத்தில் எந்தவித சமரச நடவடிக்கையையும் எடுக்காத பாஜக தலைமையிலான முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்தன.
முதல்வருக்கு எதிராக நாளை (பிப். 10) கூடவுள்ள சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சியினர் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், தனது கட்சி உறுப்பினர்களுடன் பிரேன் சிங் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. தலைமைச் செயலாளர் உள்பட 20 பேர் இதில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக தனி விமானம் மூலம் நேற்று (பிப். 8) தில்லி சென்ற பிரேன் சிங், அங்கு பாஜக மூத்த தலைவர்களை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கான காரணம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில் பிரேன் சிங் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்து, அதற்கான ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடன் இன்று நேரில் வழங்கினார்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... முதுகெலும்பும் முட்டுக்கொடுப்புகளும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.