
இந்தியாவில் மெடாநியூமோவைரஸ் பாதிப்பு 7 ஆக அதிகரித்திருக்கிறது. பெங்களூரு, நாக்பூர், தமிழ்நாட்டில் தலா இரண்டு குழந்தைகளுக்கும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒருவருக்கும் எச்எம்பிவி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில், இந்த தொற்றினால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நாட்டில் எச்எம்பிவி பாதிப்பு அதிகரித்து வருவது, கரோனா போன்றதொரு நிலையை ஏற்படுத்தாது, எனவே மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், எச்எம்பி தீநுண்மி என்பது புதிய வைரஸ் ஒன்றும் இல்லை. இது 2001ஆம் ஆண்டே கண்டறியப்பட்ட வைரஸ்தான் என்றும், பல ஆண்டுகாலமாக உலகம் முழுவதும் பலருக்கும் இது பாதித்து வந்துள்ளது என்றும் நட்டா தெரிவித்திருக்கிறார்.
பொதுவாகவே எச்எம்பிவி பாதிப்புக்கு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இருக்காது, உரிய நேரத்தில் கண்டறிந்துவிட்டால், தீவிரத்தன்மையைக் கட்டுப்படுத்திவிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையமும் இணைந்து, நாட்டில் நோய் பரவல் தன்மையை கண்காணித்து வருவதாகவும் நட்டா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மழை மற்றும் குளிா் காலங்களில் இன்ஃப்ளூயன்ஸா, பாரா இன்ஃப்ளூயன்ஸா, கரோனா, ரெஸ்பிரேட்டரி சிண்ஸ்டியல் வைரஸ் எனப்படும் சுவாசத் தொற்று நோய், அடினோ வைரஸ், ரைனோ வைரஸ் பரவுவது வழக்கமான நிகழ்வு. அதனுடன் சோ்த்து, அதைவிட வீரியம் குறைந்த ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் என்ற எச்எம்பி தீநுண்மி தொற்றும் பல காலமாக சமூகத்தில் பரவி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அறிகுறிகள்..
சளி, காய்ச்சல், இருமல், சுவாச பாதிப்பு ஆகியவை அதன் முக்கிய அறிகுறிகள். அதனால் பாதிக்கப்பட்டவா்களில் 90 சதவீதம் பேருக்கு தானாகவே அந்தப் பிரச்னை சரியாகிவிடும். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள், எதிா்ப்பாற்றல் குறைந்தவா்கள், முதியவா்கள் மட்டும் அந்தப் பாதிப்புக்கு உரிய சிகிச்சை பெற வேண்டியது அவசியம் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.