திருப்பதி கூட்ட நெரிசல் விவகாரத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் உள்பட 2 பேரை இடைநீக்கம் செய்து முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், திருப்பதி திருமலை தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி, தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரியும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் திருமலை ஏழுமலையான் கோவிலில் நாளை (ஜன. 10) வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறக்கப்படவுள்ளது. இதனையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சர்வதரிசன டிக்கெட் வாங்க திருப்பதியில் குவிந்தனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் நேற்று (ஜன. 8) உயிரிழந்தனர்.
மேலும், பலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருப்பதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
உலகப் புகழ் பெற்ற திருமலை ஏழுமலையான் கோயிலுக்குச் சென்ற பக்தர்களுக்கு நேர்ந்த இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
டிக்கெட் விநியோகத்தில் தேவஸ்தானத்தின் முறையான திட்டமிடாத நிர்வாகக் குறைபாடே காரணம் என பலர் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இதற்கு முன்னதாக, விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்தில் அதிகாரிகள் சரியாக நிலைமையைக் கையாளவில்லை என்று அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, துணை காவல் கண்காணிப்பாளர் உள்பட இரு அதிகாரிகளை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
திருப்பதி காவல் கண்காணிப்பாளர் எல்.சுப்பாராயுடு, இணை ஆணையர் கெளதமி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு அறிவித்தார். மேலும், மோசமாகக் காயமடைந்தோருக்கு ரூ. 5 லட்சமும், லேசான காயம் அடைந்தோருக்கு ரூ.2 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









