
மும்பை : நவி மும்பையில் உள்ள கர்கார் பகுதியில் சர்வதேச கிருஷ்ண பக்தர்கள் சங்கமான இஸ்கான் தரப்பால் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ஸ்ரீ ராதா மதன்மோகன்ஜி இஸ்கான் கோயிலை இன்று(ஜன. 15) திறந்துவைத்தார் பிரதமர் மோடி. அதனைத்தொடர்ந்து அங்கு பூஜை செய்து சாமியை வழிபட்டார் அவர்.
அப்போது அவர் பேசியதாவது, “இஸ்கான் கோயிலானது நம்பிக்கை, தத்துவம் மற்றும் ஞானத்தின் மையமாக திகழ்கிறது. இந்திய தேசம் வெறும் நிலப்பகுதி மட்டுமல்ல.. இது கலாசாரம் மற்றும் பாரம்பரியம் வாழிம் பூமி. இங்கு ஞானம் என்பது ஆன்மீகத்தை பற்றி அறிவதேயாகும்” என்று பேசியுள்ளார்.
9 ஏக்கர் பரப்பளவில் வேத பாடசாலை, அருங்காட்சியகம், கலையரங்கம், தியான மையம் உள்ளிட்ட பல அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது இஸ்கான் கோயில்.
அண்டை தேசமான வங்கதேசத்தில் இஸ்கானைச் சேர்ந்ததொரு முக்கிய ஆன்மீக குரு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவில் இஸ்கான் அமைப்பு பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று இஸ்கானின் புதியதொரு கோயிலை பிரதமர் திறந்து வைத்திருப்பது கவனத்தை பெறுகிறது.