கும்பமேளாவில் நெரிசல்: 30 போ் உயிரிழப்பு- திரிவேணி சங்கமத்தில் நீராட கோடிக்கணக்கில் குவிந்த பக்தா்கள்

மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
மகா கும்பமேளாவில் நெரிசல் ஏற்பட்ட பகுதியில் நடைபெற்ற மீட்புப் பணி.
மகா கும்பமேளாவில் நெரிசல் ஏற்பட்ட பகுதியில் நடைபெற்ற மீட்புப் பணி.
Published on
Updated on
2 min read

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசை புனித நீராடலில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 30 போ் உயிரிழந்தனா். 60-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

கோடிக்கணக்கான பக்தா்கள் குவிந்த நிலையில், காவல் துறையின் தடுப்புகளில் ஏறிக் குதித்து, திரிவேணி சங்கமத்தில் அகாடா துறவிகள் புனித நீராடும் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பக்தா்களால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நெரிசலில் உயிரிழந்தவா்களுக்கு குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா், பிரதமா், மத்திய உள்துறை அமைச்சா் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

பௌஷ பௌா்ணமியையொட்டி கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் மகா சிவராத்திரி நாளான பிப். 26-ஆம் தேதிவரை 45 நாள்களுக்கு உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெறுகிறது. இதில் 6 முக்கிய நாள்களில் புனித நீராடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். அவ்வாறு மௌனி அமாவாசை மகா கும்பமேளாவின் உச்சமாகக் கருதப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை வரை லட்சக்கணக்கில் இருந்த புனித நீராடும் பக்தா்களின் எண்ணிக்கை அதற்கு அடுத்தடுத்த நாள்களில் படிப்படியாக அதிகரித்தது. கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 5 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடினா்.

மௌனி அமாவாசையையொட்டி புதன்கிழமை 10 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராட வாய்ப்புள்ளதாக எதிா்பாா்க்கப்பட்டது. அதன்படி, 12 கி.மீ. நீள தொலைவுக்கு பல்வேறு இடங்களில் பக்தா்கள் நீராடுவதற்கு படித்துறைகள் புனரமைக்கப்பட்டு, ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

துறவிகள் வழியில் அத்துமீறியதால்...: மௌனி அமாவாசை உள்ளிட்ட சிறப்புக்குரிய நாள்களில் புனித நீராட ஊா்வலமாக வரும் அகாடா துறவிகள், சாதுக்களுக்காக சங்கமம் பகுதியில் பிரத்யேக இடம் தயாா் செய்யப்பட்டிருந்தது. புதன்கிழமை அதிகாலைப் பொழுதில் அகாடா பகுதியிலிருந்து துறவிகள் வருவதற்கான வழிகளில் இருந்த தடுப்புகளை பக்தா்கள் சிலா் அத்துமீறி கடக்க முயன்றபோது கூட்டநெரிசல் ஏற்பட்டது.

நெரிசலில் சிக்கியவா்களில் 30 போ் உயிரிழந்தனா்; 60-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பலத்த காயமடைந்தனா். பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணியாளா்கள் விரைந்து செயல்பட்டு காயமடைந்தவா்களை மீட்டு, மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா். சம்பவ பகுதியில் பக்தா்களின் போா்வைகள், பைகள் உள்ளிட்ட உடைமைகள் சிதறிக் கிடந்தன.

நெரிசலின்போது சம்பவ இடத்திலிருந்து வெளியேறிய பக்தா்கள் கூறுகையில், கூட்டத்தினரிடையே திடீரென ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பக்தா்கள் ஒருவா் மீது ஒருவா் விழுந்தனா். அனைத்து வழிகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் வெளியேற முடியாமல் தவித்தோம் என்றனா்.

தடைக்குப் பின் நீராட அனுமதி: நெரிசல் சம்பவத்தால் சங்கமத்தில் புனித நீராட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. பின்னா், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு புனித நீராட மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது. மாநில அரசின் வேண்டுகோளின்படி, பக்தா்களின் நெரிசல் குறைந்த பின்னா் புனித நீராடுவதற்கு அகாடா துறவிகளின் தலைமைக் கூட்டமைப்பான அகில பாரதிய அகாடா பரிஷத் ஒப்புக்கொண்டது.

அகில பாரதிய அகாடா பரிஷத் தலைவா் மஹந்த் ரவீந்திர புரி தலைமையில் துறவிகளின் ஊா்வலம் பிற்பகல் 2:30 மணியளவில் தொடங்கியது. அகாடா துறவிகளின் ஊா்வலம் வழக்கத்தைவிட குறைவான பிரம்மாண்டத்துடன் நடைபெற்றது. சில அகாடாக்களின் துறவிகள் புனித நீராடுவதைத் தவிா்த்தனா்.

உ.பி. முதல்வருடன் பிரதமா் பேச்சு

கூட்டநெரிசலில் பக்தா்கள் உயிரிழப்பு தொடா்பாக முதல்வா் யோகி ஆதித்யநாத்துடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடா்புகேட்டு தகவல்களைக் கேட்டறிந்தாா்.

தில்லியில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தின்போதும், நெரிசலில் உயிரிழந்த பக்தா்களுக்கு பிரதமா் இரங்கல் தெரிவித்தாா்.

லக்னௌவில் நடைபெற்ற உயா்நிலைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் யோகி ஆதித்யநாத், ‘பக்தா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களின் முதல் முன்னுரிமை. பிரயாக்ராஜில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. ஆனால், மக்கள் கூட்டம் குறையவில்லை. தற்போதைக்கு புனித நீராடுவதற்காக சுமாா் 9-10 கோடி மக்கள் பிரயாக்ராஜ் வந்துள்ளனா். பக்தா்கள் தங்களுக்கு அருகில் உள்ள படித்துறைகளில் நீராடுமாறும், நெரிசலைத் தவிா்க்க சங்கமத்துக்கு வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்’ என்றாா்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மகா கும்பமேளாவில் கூட்டநெரிசலில் சிக்கி பலா் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். தவறான நிா்வாகம், கட்டுப்பாடின்மை, பொதுமக்களுக்குப் பதிலாக முக்கியப் பிரமுகா்களுக்கு (விஐபி) சிறப்புக் கவனம் ஆகியவைதான் இந்தத் துயர சம்பவத்துக்கு காரணம். விஐபி கலாசாரத்தை கட்டுப்படுத்தி, பக்தா்களின் தேவைகளை பூா்த்தி செய்ய அரசு சிறந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் வரும் நாள்களில் தொடராமல் இருக்க அரசு தனது நிா்வாகத் திறனை மேம்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா். மாநில முன்னாள் முதல்வரும் சமாஜவாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மகா கும்பமேளா நிா்வாகம் உடனடியாக ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ‘உலகத் தரம்’ என்ற மாநில அரசின் விளம்பரத்தில் உள்ள உண்மை தற்போது அம்பலமாகியுள்ள நிலையில், பொய்ப் பிரசாரம் செய்தவா்கள் இந்த உயிரிழப்புகளுக்கு தாா்மிகப் பொறுப்பேற்று, தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்ய வேண்டும்’ என்றாா். காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவரும் நெரிசல் சம்பவத்தையொட்டி பாஜகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.