புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டையை நிறுத்தியது தான்தான் என டிரம்ப் கூறிவருவது குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌன விரதத்தையே கடைப்பிடித்ததாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.
சண்டை நிறுத்தம் குறித்து டிரம்ப்பின் பேச்சுக்கு, நாடாளுமன்றத்தில் மோடி மௌன விரதத்தைக் கடைப்பிடித்தார். இன்னமும் இந்தியா மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை டிரம்ப் எழுப்பு வருகிறாரே, ஆனாலும் மோடி மௌனமாகவே இருப்பதா? நரேந்திர மோடி, நாடுதான் நமக்கு முக்கியம், நாம் அனைவரும் நாட்டுடன்தான் இருக்கிறோம் என்று கார்கே தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், டிரம்ப் அறிவித்திருக்கும் 25 சதவீத வரி விதிப்பு இந்திய வர்த்தகத்தையும், சிறு, குறு தொழில்களையும், விவசாயிகளையும் அதிகம் பாதிக்கும். இதுதான் உங்கள் நண்பர், நமஸ்தே டிரம்ப், நமது பக்கம் டிரம்ப் அரசு என்று சொன்னதற்கு எல்லாம், உங்கள் நண்பர், நமது நாட்டுக்கு அளிக்கும் வெகுமதியா? என்று கேட்டுள்ளார் கார்கே.
உங்கள் அமைச்சர்கள் பல மாதங்களாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தீர்களே, சிலர் பல நாள்கள் வாஷிங்டனில் தங்கியிருந்தார்களே என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
உங்களின் சுயாதீன-முடிவுக்கு இந்தியா மிகப்பெரிய அடியைப் பெற்றுள்ளது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பதே அணிசேராமைதான் என்பதற்கு வரலாறு சான்றாக உள்ளது. பாஜகவின் வெளியுறவுக் கொள்கையால் நமது நாட்டின் வெளியுறவுக்குக் பலத்த அடி கிடைத்துள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.