
அகமதாபாத் விமான விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சனிக்கிழமை பார்வையிட்டார். அப்போது ஷக்தி சிங் கோஹில், முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து காயமடைந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் உயிர் தப்பிய விஷ்வாஸ்குமார் ரமேஷையும் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த நேரத்தில் நாங்கள், பலியானோர் குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும் ஆதரவளிக்க வந்துள்ளோம். நகர மக்கள் இந்த கொடூரமான விபத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். விமான விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இது துயரநேரம் என்பதால் விசாரணை குறித்து எதுவும் பேச விரும்பவில்லை.
கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் தகவல்களின் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் இருந்தவர்கள், விமானம் மோதிய மாணவர் விடுதியில் இருந்தவர்கள், அப்பகுதியில் இருந்தவர்கள் என 274 பேர் பலியாகினர்.
பலியானவர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என ஏர் இந்தியாவின் டாடா குழுமம் அறிவித்திருந்தது. விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டியும் மீட்கப்பட்டுள்ளது. கறுப்புப் பெட்டியின் தகவல்களின் மூலம், விமானத்தின் இறுதிநேர நிகழ்வு குறித்து தெரிய வரும். மேலும், இந்த விபத்து குறித்து விசாரிக்க உள்துறை செயலர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் விமானப் போக்குவரத்துச் செயலர் உள்பட பல்வேறு துறை செயலர்களும், மாநிலச் செயலர், காவல் ஆணையர் என பல அதிகாரிகளும் ஈடுபடவுள்ளனர். விசாரணைக்காக 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டதுடன், விசாரணையை திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் தொடங்கவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.