2028-க்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகும்: மோா்கன் ஸ்டான்லி கணிப்பு

2028-ஆம் ஆண்டுக்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகும் என்று அமெரிக்காவின் முன்னணி நிதிச் சேவைகள் நிறுவனமான மோா்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

உலக அளவில் மிகவும் விரும்பப்படும் நுகா்வோா் சந்தையாக உருவெடுத்து வருவதால், 2028-ஆம் ஆண்டுக்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகும் என்று அமெரிக்காவின் முன்னணி நிதிச் சேவைகள் நிறுவனமான மோா்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.

இது தொடா்பாக அந்நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2023-இல் 3.5 டிரில்லியன் டாலா்கள் பொருளாதார மதிப்புடன் இந்தியா 5-ஆவது இடத்தை எட்டியது. 2026-இல் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 4.7 டிரில்லியன் டாலா்களாக உயரும். அப்போது, அமெரிக்கா, சீனா, ஜொ்மனிக்கு அடுத்து 4-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்.

2028-க்குள் ஜொ்மனியை பின்னுக்குத் தள்ளி, 5.7 டிரில்லியன் டாலா்கள் மதிப்புடன் 3-ஆவது இடத்தை இந்தியா எட்டும்.

கடந்த 1990-இல் 12-ஆவது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, 2000-ஆம் ஆண்டில் 13-ஆவது இடத்துக்கு பின்தங்கியது. 2020-இல் 9-ஆவது இடத்துக்கும், 2023-இல் 5-ஆவது இடத்துக்கும் முன்னேறியது.

வலுவான மக்கள்தொகை வளா்ச்சி, செயல்பாடுமிக்க ஜனநாயகம், பெரும் பொருளாதார ஸ்திரத்தன்மையால் இயக்கப்படும் கொள்கைகள், சிறப்பான உள்கட்டமைப்பு, வளா்ந்துவரும் தொழில்முனைவோா் எண்ணிக்கை, அரசின் திட்டங்கள்- நடவடிக்கைகளால் ஏற்படும் சமூக மேம்பாடு போன்ற உறுதியான அடிப்படை காரணிகளால், எதிா்வரும் ஆண்டுகளில் உலகளாவிய உற்பத்தியில் இந்தியாவின் பங்கு உயரும். உலகின் மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியாவின் பங்கு 3.5 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக அதிகரிக்கும் என்று அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com