
கேரளத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் வாணலியில் தோட்டாக்களை சூடாக்கியதைத் தொடர்ந்து அவை வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டுள்ளது.
கொச்சி நகர போலீஸ் ஆயுதப்படை முகாமில் உதவி ஆய்வாளர் சி.வி. சஜீவ் என்பவர் போலீஸ் அதிகாரி ஒருவரின் இறுதிச் சடங்கில் மரியாதை நிமித்தமாக சுடப்படும் தோட்டாக்களை ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இறுதிச் சடங்குகளில் சுடப்படுபவை வெற்று தோட்டாக்கள். அவற்றில் வெடிமருந்து இருக்கும். இவை உண்மையான தோட்டாக்களைப் போல சக்திவாய்ந்ததாக இல்லையென்றாலும் அருகிலிருந்து சுட்டால் மரணம் கூட ஏற்படும்.
வெடிமருந்து பிரிவின் பொறுப்பாளராக இருந்த சஜீவ் ஆயுதக் களஞ்சியத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெற்று தோட்டாக்கள் துருப்பிடித்து இருந்ததைக் கண்டார்.
பொதுவாக இவ்வாறு துருப்பிடித்த தோட்டாக்களை வெயிலில் காயவைத்து மீண்டும் பயன்படுத்துவார்கள்.
ஆனால் நேரம் குறைவாக இருந்ததால் சஜீவ், முகாம் சமையலறையின் வாணலியில் வைத்து தோட்டாக்களை சூடுபடுத்தியுள்ளார்.
அவ்வாறு சூடுபடுத்தியபோது, இரண்டு தோட்டாக்கள் பெரும் சத்தத்துடன் வெடித்தன.
“வெற்று தோட்டாக்களுக்குள் வெடிமருந்து இருக்கும் என்பதை உதவி ஆய்வாளர் மறந்துவிட்டார். சமையலறையில் எரிவாயு சிலிண்டர்கள் வேறு இருந்தன. அதிர்ஷ்டவசமாக, இது பெரும் தீ விபத்தாகவில்லை" என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கொச்சி நகர போலீஸ் ஆணையர் புட்டா விமலாதித்யா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க உதவி ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.