'நீதிமன்றம் குப்பைத்தொட்டி அல்ல' - நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டம்.
அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டம்.
அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டம்.
Published on
Updated on
1 min read

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் இன்று(மார்ச் 25) காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

மாா்ச் 14-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் அதிகாரபூா்வ இல்லத்தில் ஓா் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தபோது பாதி எரிந்த நிலையில் 4 முதல் 5 மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது.

விபத்தின்போது கண்டறியப்பட்ட பணம் குறித்து விளக்கமளிக்குமாறு யஷ்வந்த் வா்மாவுக்கு தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உபாத்யாய கடிதம் அனுப்பிய நிலையில், அந்த பணம் தனக்குச் சொந்தமானது அல்ல என்று நீதிபதி யஷ்வந்த் வர்மா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, நீதிபதி யஷ்வந்த் வர்மா நீதித்துறைப் பணிகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக தில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

இதன் தொடர்ச்சியாக, தில்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மாற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

ஏற்கெனெவே அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி யஷ்வந்த் வர்மா, 2021ல் தில்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.

தற்போது தில்லி உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள யஷ்வந்த் வர்மா, கொலீஜியத்திலும் உறுப்பினராக இருக்கிறார்.

இந்நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மாற்றுவதற்கு அலகாபாத் வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

"நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டாம் என்று தலைமை நீதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எந்த நீதிமன்றமும் குப்பை கொட்டும் இடம் அல்ல. நடவடிக்கைகள் முடியும் வரை அவர் உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நீதிபதிகளின் இடமாக உயர்நீதிமன்றம் மாறக்கூடாது. அத்தகைய நீதிபதிகளை நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளமாட்டோம்" என்று அலகாபாத் வழக்கறிஞர்கள் சங்கம் கூறியுள்ளது.

நீதிமன்றங்களில் ஊழலைக் களைய வேண்டும், அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மாற்றும் முடிவை கொலீஜியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளது.

மற்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com