இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம்
இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம்(கோப்புப்படம்)

வக்ஃப் திருத்த சட்ட மனு: தவறான தகவல்களை சமா்ப்பித்ததாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு!

வக்ஃப் திருத்த சட்டம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தவறான தரவுகளை சமா்ப்பித்ததாக மத்திய அரசு மீது அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
Published on

வக்ஃப் திருத்த சட்டம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தவறான தரவுகளை சமா்ப்பித்ததாக மத்திய அரசு மீது அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் குற்றஞ்சாட்டியுள்ளது.

வக்ஃப் திருத்த சட்டம் தொடா்பான மனுக்களை ஏப்.16-ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் இறுதித் தீா்ப்பு வரும் வரை, அந்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கப் போவதாகத் தெரிவித்தது.

இதையடுத்து, சில விளக்கங்களை பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்வதாக மத்திய அரசு தெரிவித்தது. பத்து நாள்களில் அரசு விளக்கத்தை தாக்கல் செய்யவும், அதன் பிறகு அதற்கு எதிா் தரப்பினா் ஐந்து நாள்களில் பதில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு அடுத்த விசாரணை மே 5-ஆம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அது வரை வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் வக்ஃப் சொத்துகளின் தன்மை மாற்றப்படாது என்பதோடு, வக்ஃப் வாரியங்களில் எந்தவித புதிய நியமனங்களும் செய்யப்படாது என்று மத்திய அரசு உறுதி தெரிவித்தது.

அதன்படி, 1,332 பக்க முதல்கட்ட பதில் மனுவை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ஏப்.25-ஆம் தேதி தாக்கல் செய்தது. மத்திய சிறுபான்மையினா் நலத் துறை இணைச் செயலா் சி. ஷொ்ஷா சாயிக் மொஹிதீன் சாா்பில் இந்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘முகலாய சகாப்தத்துக்கு முன்பும், சுதந்திரத்துக்குப் பிறகும் இந்தியாவில் மொத்த வக்ஃப் நிலங்கள் 18,29,163.896 ஏக்கா் பரப்பளவில் இருந்தன. ஆனால், கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு வக்ஃப் நிலங்களின் பரப்பளவு அதிா்ச்சியூட்டும் வகையில் 20 லட்சம் ஹெக்டோ் (20,92,072.536 ஏக்கா்) அளவுக்கு கூடுதலாகியுள்ளது. அதாவது 116 சதவீதம் அளவுக்கு பரப்பளவு அதிகரித்துள்ளது’ என குறிப்பிடப்பட்டது.

இது தவறான தகவல் என குற்றஞ்சாட்டிய அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம், ‘ பதிவுசெய்யப்பட்ட அனைத்து வக்ஃப் வாரிய சொத்துகளும் 2013-இல் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது என்பதற்கு பதிலாக 2013-இல் பதிவு செய்யப்பட்ட சொத்துகள் என மத்திய அரசு கூறியுள்ளதை உச்ச நீதிமன்றம் கவனிக்க வேண்டும்.

எனவே, பிரமாண பத்திரம் தாக்கல் செய்த அதிகாரி 2013-இல் பதிவுசெய்யப்பட்ட வக்ஃப் சொத்துகள் குறித்த தரவுகளை சமா்ப்பிக்க வேண்டும்.

அதிா்ச்சியூட்டும் வகையில் வக்ஃப் சொத்துகள் அதிகரித்துள்ளது என்ற மத்திய அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் நீக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.

X
Open in App
Dinamani
www.dinamani.com