
விரைவில் தமிழகத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில், கர்நாடக மாநில பெற்றோர்கள், தோல்வியடைந்த மகனுக்கு கேக் வெட்டிக் கொண்டாடிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்வில் தோல்வியடைந்தால் திட்டுவார்கள், அடிப்பார்கள். அது என்ன புதுசா.. கேக் வெட்டிக் கொண்டாட்டம் என்று கேட்பவர்களுக்கு.. மாற்றி யோசித்ததன் விளைவுதான் இது என்றும், நிச்சயம் இது அவர்களுக்கு பலனிளிக்கும் என்றே கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலம் பகல்கோட் பகுதியில், 10ஆம் வகுப்புத் தேர்வில் 600க்கு வெறும் 200 மதிப்பெண்கள் எடுத்து அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்த தங்களது மகனை திட்டுவதை விட்டுவிட்டு, நீ பாடத்தில்தான் தோல்வியடைந்தாய், வாழ்க்கையில் அல்ல, எனவே வெற்றி பெற்று விடலாம் என்று நம்பிக்கையளித்து அக்கம் பக்கத்தினரைக் கூப்பிட்டு கேக் வெட்டிக் கொண்டாடியிருக்கிறார்கள் இவரது பெற்றோர்.
தன்னை திட்டாமல் கேக் வெட்டிக் கொண்டாடிய பெற்றோரால் மனம் மாறிய மகன், இனி கடுமையாகப் படித்து பெற்றோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.
சமூக வலைதளத்திலும் இது பற்றி பலரும் பாராட்டியே கருத்திட்டிருக்கிறார்கள். தோல்வியால் மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலில் இருந்து வெளியே கொண்டுவரவும் நம்பிக்கை அளிக்கும் வகையிலும் இந்த செயல் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.