
புது தில்லி: பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தான் பாஜகவை விட்டுச் செல்லப்போவதில்லை என்றும், எனது கட்சிதான் என்னை அங்கும் இங்கும் ஓரிரு முறை மாற வைத்தது என்றும் கூறியிருக்கிறார்.
வருங்காலத்தில் பிகார் முதல்வர் நிதீஷ் குமார், வேறு கட்சிக்கு மாறலாம் என எதிர்க்கட்சிகள் ஆரூடம் கூறிவரும் நிலையில், நிதீஷ் குமார் அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் பேசியிருக்கிறார்.
அதில், இனி நான் இங்கேதான் இருப்பேன், எனது கட்சிதான் என்னை இங்கும் அங்கும் ஓரிரு முறைகள் செல்ல வைத்தது. ஆனால் இது மீண்டும் நடக்கப்போவதில்லை. என்னை யார் முதல்வராக்கினார்கள்? மறைந்த அடல் பிகாரி வாஜ்பாய்தான் என்று கூறியிருக்கிறார்.
நிதீஷ் குமாரின் நெருங்கிய உதவியாளர் ராஜீவ் ரஞ்சன் என்கிற லல்லன் சிங், ஐக்கிய ஜனதா தளத்தை பாஜக இரண்டாக உடைக்கப் பார்ப்பதாகவும், பாஜகவிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேற வேண்டும் என்று கூறியிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை, பிகாரில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பேசிய நிதீஷ் குமார் இவ்வாறு பேசியிருந்தார்.
1990ஆம் ஆண்டிலேயே பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணியில் இருந்தன. ஆனால் 2013ஆம் ஆண்டு பாஜக பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி பரிந்துரைக்கப்பட்டபோது, பாஜகவிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறி ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்தது. அந்தக் கூட்டணியும் 2017ஆம் ஆண்டுடன் முடிந்துபோனது. பிறகு நிதீஷ் குமார் கட்சி மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே திரும்பியது.
இந்தக் கூட்டணியும் 2022 வரை நீடித்தது. அப்போது, பாஜக தங்கள் கட்சியை உடைக்கப் பார்க்கிறது என்று குற்றம்சாட்டி, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியிலிருந்து வெளியேறி மீண்டும் லாலு பிரசாத் கட்சியுடன் கூட்டணி அமைத்தார்.
கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றபோது, நிதீஷ் இந்தியா கூட்டணியில் இடம்பெறுவார் என்று நினைத்திருந்த போது, கூட்டணியை அப்படியே விட்டுவிட்டு பாஜகவுடன் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.