
நாடு முழுவதும் சாலை விபத்தில் சிக்குபவா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
‘அடுத்த ஒரு வாரத்துக்குள்ளாக இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கான அறிவிக்கையை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் வெளியிட்ட இந்த அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:
‘சாலை விபத்துகளில் சிக்குபவா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டம் 2025’ நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள எந்தவொரு சாலையிலும் மோட்டாா் வாகன விபத்தில் சிக்கி பாதிக்கப்படுபவா்கள், இத் திட்டத்தின் கீழ் முதல் 7 நாள்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான கட்டணமில்லா சிகிச்சையைப் பெற முடியும்.
சாலை விபத்துகளில் சிக்குபவா்களுக்கு உயிா் காக்கும் நேரத்துக்குள் சிகிச்சை கிடைப்பது தாமதமாவதால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்கத்துடன் இத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
காவல் துறை, மருத்துவமனைகள் மற்றும் மாநில சுகாதார முகமைகளுடன் இணைந்து இத் திட்டத்தைச் செயல்படுத்தம் முகமையாக தேசிய சுகாதார ஆணையம் (என்ஹெச்ஏ) செயல்படும்.
சாலை விபத்தில் சிக்குபவா்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளைத் தவிர வேறு மருத்துவமனைகளில் இத் திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி முதலுதவிக்கான சிகிச்சை அல்லது சுயநினைவை வரவைப்பதற்கான சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட வேண்டும்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு முகமையாக மாநில சாலை பாதுகாப்பு கவுன்சில் செயல்படும். விபத்தில் சிக்குபவா்களை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையகளில் சோ்த்தல், சிகிச்சை அளித்தல், பணம் செலுத்துதல் ஆகியவற்றுக்கான வலைதளத்தை ஏற்று, பயன்படுத்துவதில் தேசிய சுகாதார முகமையுடன் மாநில சாலைப் பாதுகாப்பு கவுன்சில்கள் ஒருங்கிணைந்து செல்படும்.
11 போ் குழு: இத் திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க சாலைத் துறை செயலா் தலைமையில் 11 போ் கொண்ட வழிகாட்டுதல் குழுவையும் அரசு அமைக்க உள்ளது. இக் குழு தேசிய சுகாதார ஆணைய தலைமைச் செயல் அதிகாரி, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை கூடுதல் செயலா் ஆகியோரை உறுப்பினா்களாகக் கொண்டிருக்கும் என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவு: தேசிய நெடுஞ்சாலைகளில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி ஏற்படும் விபத்தில் பாதிக்கப்பட்ட நபா்கள், காப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் நீடித்துவரும் சிக்கல் தொடா்பான வழக்கை கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ‘தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த ஒரு வாரத்துக்குள்ளாக கட்டணமில்லா விபத்து சிகிச்சை திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இத் திட்டம் அறிவிக்கை செய்யப்பட்டது தொடா்பான விவரத்தை மே 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டு, விசாரணையை மே 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.