காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு!
காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்ய மத்திய அரசு கெடு விதித்திருப்பது பற்றி...

காங்கிரஸின் அக்பர் சாலை அலுவலகத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி (கோப்புப்படம்)
ANI

காங்கிரஸின் அக்பர் சாலை அலுவலகத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி (கோப்புப்படம்)
ANI
காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமாக கடந்தாண்டு வரை செயல்பட்ட ’24, அக்பர் சாலை’ அலுவலகத்தை சனிக்கிழமைக்குள் காலி செய்ய மத்திய அரசு கெடு விதித்துள்ளது.
மேலும், ’5, ரைசினா சாலை’யில் உள்ள காங்கிரஸ் இளைஞர் அணியின் தலைமை அலுவலகத்தையும் காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்தாண்டு கோட்லா மார்க்கில் கட்டப்பட்ட காங்கிரஸின் புதிய தலைமை அலுவலகமான ‘இந்திரா பவன்’ திறக்கப்பட்டது. அந்த அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி திறந்துவைத்தார்.
இருப்பினும், அக்பர் சாலையில் இருந்த பழைய அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், காங்கிரஸின் அக்பர் சாலை மற்றும் ரைசினா சாலை அலுவலங்கள் அரசு இடத்தில் இருப்பதாகவும் அதனை உடனடியாக காலி செய்யவும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்தது. தற்போது, மார்ச் 28 ஆம் தேதிக்குள் காலி செய்ய கெடு விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த தகவலை காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் ஆங்கில ஊடகத்திடம் உறுதி செய்துள்ளார்.
மேலும், இந்த பிரச்னையை எதிர்கொள்ள சட்டரீதியிலான வழிகளை ஆராய்ந்து வருவதாகவும், அவகாசம் கோரவும் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே, காங்கிரஸின் மூத்த மாநிலங்களவை உறுப்பினரின் பெயருக்கு அந்த இடத்தை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைக்கவும் ஆலோசித்து வருகிறார்கள்.
48 ஆண்டுகால பிணைப்பு
அக்பர் சாலை அலுவலகம், 48 அண்டுகளாக காங்கிரஸின் தலைமை அலுவலகமாக செயல்பட்டுள்ளது. இந்திரா காந்தி முதல் ராகுல் காந்தி வரை பணியாற்றிய வரலாற்று சிறப்புமிக்க அலுவலகம் ஆகும்.
ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது, வைஸ்ராய் லார்ட் லின்லித்கோவின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்த சர் ரெஜினால்ட் மேக்ஸ்வெல் இங்குதான் தங்கியிருந்தார்.
1960-களில் இந்தியாவுக்கான மியான்மர் தூதரான டாவ் கின் கி தங்குவதற்கு இந்த பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற டாவ் கின் கியின் மகள் ஆங் சான் சூச்சி இங்கு பல ஆண்டுகளாக வசித்து வந்தார்.
இந்த நிலையில், 1977 ஆம் ஆண்டு காங்கிரஸ் படுதோல்வியைத் தொடர்ந்து பிளவுபட்டபோது, அந்த பங்களாவை இந்திரா காந்தி பிரிவினர் பயன்படுத்திக் கொள்ள அப்போதைய மாநிலங்களவை உறுப்பினர் ஜி. வெங்கடசாமி வழங்கினார்.
பின்னர், இதுவே காங்கிரஸ் கட்சியின் அலுவலகமாக மாறியது. ராஜீவ் காந்தி, பி.வி. நரசிம்ம ராவ் மற்றும் டாக்டர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பிரதமர்கள் இந்த அலுவலகத்தையே கட்சிப் பணிகளுக்காக பயன்படுத்தினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...