
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருப்பதற்கான சோதனை மற்றும் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய உள் விவகாரத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எந்நேரமும் இந்தியா பதில் தாக்குதலைத் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
எனவே, இந்தியா தரப்பில், எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்க, பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு பாகிஸ்தானையொட்டிய எல்லையோர இந்திய மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
மற்றும் இந்த ஒத்திகையை புதன்கிழமை (மே. 7) நாட்டில் உள்ள 250 மாவட்டங்களில் நடத்துமாறும் மத்திய அரசு கேட்டுக்கொண்டதாக மத்திய அரசின் உயா்நிலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் நேரத்தில் முக்கிய சேவைகள் ஏதேனும் பாதிக்கப்படுமா? நிறுத்தப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனால், மே 7ஆம் தேதி அத்தியாவசிய சேவைகளான ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து போன்றவை நிறுத்தப்படுவது குறித்தோ, பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்படுவது குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை.
எனவே, அடுத்த அறிவிப்பு வரும் வரை பள்ளி, கல்லூரிகள், வங்கிகள் என அனைத்தும் வழக்கம் போல செயல்படும் என்று தெரிய வந்துள்ளது.