
புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளின் இருப்பிடங்களை மட்டுமே தாக்கியிருக்கிறோம். இந்த தாக்குதல் காரணமாக மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்திய முப்படைகளும் ஒருங்கிணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் அமைந்திருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடித் தாக்குதலை செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடத்தியிருக்கிறது.
இது குறித்து பேசிய ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியால்தான் இந்த தாக்குதல் சாத்தியமாகியிருக்கிறது என்றார்.
அப்பாவி மக்களை கொன்றவர்கள் அழிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடியை ராணுவம் தந்திருக்கிறது. துல்லிய தாக்குதல் மூலம் இந்தியா தனது உரிமையை நிலைநாட்டி உள்ளது என்று முப்படை வீரர்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
ஆபரேஷன் சிந்தூரின் இலக்கு, முழுமையாக எட்டப்பட்டது. இந்திய முப்படைகளால் நாட்டுக்கு பெருமை. முப்படை வீரர்களுக்கும் எனது சல்யூட். இந்திய வீரர்கள் மகத்தான் தைரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த அதிரடித் தாக்குதலானது, முழுக்க முழுக்க திட்டமிட்டு, அனைத்து சாத்தியக்கூறுகளும் கண்டறியப்பட்ட பிறகே வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் மூலம், பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் தளங்கள், முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் கண்டறியப்பட்டு துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றார் ராஜ்நாத் சிங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.