போர்ப் பதற்றம்: என்ன செய்யலாம், செய்யக்கூடாது.. மத்திய அரசு அறிவுரை
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் மக்கள், ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்பது பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.
மத்திய மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தலில், இந்திய எல்லையில் போர்ப்பதற்றம் உருவாகியுள்ள நிலையில் இணையதளத்தைப் பயன்படுத்தும் மக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்படிருக்கும் அறிவுறுத்தலில் ஆன்லைனில் வரும் தகவலைகளை கவனமுடன் கையாளவும் தவறான தகவல்களுக்கு இரையாக வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மிகக் கூடுதல் பாதுகாப்பு எச்சரிக்கையுடன் சைபர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கையாளவும். ஆன்லைனில் இருக்கும்போது கவனமுடன் இருக்கவும், தவறான தகவல்களுக்கு பலியாக வேண்டாம். நாட்டுப் பற்றுடன், கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன செய்யலாம்?
அதிகாரப்பூர்வ ஆலோசனைகள், உதவி எண்கள் மற்றும் உறுதிசெய்யப்பட்ட தகவல்களை மட்டும் பகிரவும்.
எந்தச் செய்தியையும் பகிர்வதற்கு முன்பு அதிகாரப்பூர்வப் பக்கத்தில் உண்மையை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
தவறாக தகவல்கள் கிடைக்கப்பெற்றால், புகாரளிக்கலாம்.
என்ன செய்யக்கூடாது?
நாட்டின் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளை யாரும் வெளியிடவோ, வெளிப்படுத்தவோக் கூடாது.
உறுதி செய்யப்படாத தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம்.
வன்முறை அல்லது மதக் கலவரங்களைத் தூண்டும் தகவல்களை பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.