எதிரிகளை எங்கு அடித்தால் வலிக்குமோ அங்கு அடித்தோம்: ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி

நவீன உத்திகள் மூலம் எதிரிகளை எங்கு அடித்தால் வலிக்குமோ, அதனை ஆராய்ந்து தேர்வு செய்து, அங்கு திட்டமிட்டு அதிதுல்லிய தாக்குதலை நடத்தினோம்
விமானப்படை தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ. கே. பாரதி
விமானப்படை தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ. கே. பாரதி
Published on
Updated on
2 min read

புதுதில்லி: நவீன உத்திகள் மூலம் எதிரிகளை எங்கு அடித்தால் வலிக்குமோ, அதனை ஆராய்ந்து தேர்வு செய்து, அங்கு திட்டமிட்டு அதிதுல்லிய தாக்குதலை நடத்தி எதிரி விமானங்களுக்கு இழப்புகளை ஏற்படுத்தியதுடன் இந்திய வான்வெளிக்குள் நுழைவதை வெற்றிகரமாக முறியடித்தோம் என விமானப்படை தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ. கே. பாரதி தெரிவித்தார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஆபரேஷன் சிந்தூா் தொடங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு எதிரான அனைத்து பதிலடி நடவடிக்கைகளும் ஆபரேஷன் சிந்தூரின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.

மோதல் தொடங்கிய 4-ஆம் நாளான சனிக்கிழமை, அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு உடன்பாட்டை எட்டின. இருப்பினும், ஜம்மு-காஷ்மீா் மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலை உஷாா் நிலையில் இருந்த இந்திய ஆயுதப் படைகள் முறியடித்தது.

இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூரின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விமானப்படை தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ. கே. பாரதி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.

கவனத்தோடு தாக்குதலை முன்னேடுத்தோம்

அப்போது, தாக்குதல் நடக்கும்போதே மக்களின் உயிரை பொருட்படுத்தாமல் பயணிகள் விமானங்கள் பறக்கவும் பாகிஸ்தான் அனுமதித்ததால் பின்னடைவு இருந்தாலும், கவனத்தோடு தாக்குதலை முன்னேடுத்தோம்.

எந்தவொரு பயணிகள் விமானமும் இந்திய தரப்பில் இருந்து தாக்கப்படவில்லை. நாங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு பாகிஸ்தான் மக்களுக்கு பாதிப்பின்றி பதிலடி கொடுத்தோம்.

துல்லியமாகத் தாக்கினோம்

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் சரியாக குறிவைத்து முருத்கே தீவிரவாத பயிற்சி மையத்தில் நான்கு முறை தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாத முகாம்கள் தவிர, வேறு எந்த கட்டமைப்பையும் தாக்கவில்லை.

பாகிஸ்தான் அலை அலையாக ஆளில்லா விமானம், ட்ரோன் மூலம் இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. அவற்றை எல்லாம் இடைமறித்து வெற்றிகரமாக முறியடித்தோம்.

வலிக்கும் இடம் பார்த்து தாக்கினோம்

நவீன உத்திகள் மூலம் எதிரிகளை எங்கு அடித்தால் வலிக்குமோ, அதனை ஆராய்ந்து தேர்வு செய்து, அங்கு திட்டமிட்டு அதிதுல்லிய தாக்குதலை நடத்தி எதிரி விமானங்களுக்கு இழப்புகளை ஏற்படுத்தியதுடன் இந்திய வான்வெளிக்குள் நுழைவதை வெற்றிகரமாக முறியடித்தோம்.

மே 7 முதல் 10 வரை 40 வீரர்களை இழந்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. எங்களுடைய வேலை இலக்கைத் தாக்குவதுதான், உடல்களை எண்ணுவது அல்ல என்றார்.

எஃப்16 நிறுத்தப்பட்ட தளத்தை வெற்றிகரமாக தாக்கினோம்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானின் எஃப்16 விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த சர்கோதா விமான தளம், பஸ்ரூர் வான் பாதுகாப்பு ரேடார், சுனியன் வான் பாதுகாப்பு ரேடார், அரிஃப்வாலா வான் பாதுகாப்பு ரேடார், ரஹீம் யார் கான் விமான தளம், நூர் கான் விமான தளம், சுக்கூர் விமான தளம், போலாரி விமான தளம் மற்றும் ஜக்கோபாபாத் விமான தளம் ஆகிய இடங்களில் இந்தியா நடத்திய தாக்குதல் குறித்த விடியோவை காட்டி விளக்கிய ஏ. கே. பாரதி, பாகிஸ்தானின் தளங்களில் உள்ள ஒவ்வொரு அமைப்பையும் குறிவைக்கும் திறன் நம்மிடம் உள்ளது என்றார்.

பயங்கரவாதிகள்தான் இலக்கு

பாகிஸ்தான் விமானப்படைத் தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. நமது தாக்குதல் மக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாத வகையில் பயங்கரவாதிகள் மீது மட்டும்தான் நடத்தப்பட்டது. ராணுவத்தின் மீது நடத்தப்படவில்லை. ஆனால், பாகிஸ்தான் மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

நோ்த்தியுடன் நிறைவேற்றினோம்

விமானப் படைக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும் தொழில்முறை நோ்த்தியுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறோம்.

இந்தியாவின் எச்சரிக்கையே ஆபரேஷன் சிந்தூர்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இலக்குகளை அடைந்தது, பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன, இதன் விளைவுகள் உலகிற்கு தெளிவாகத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளை பழிதீர்க்கவே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் எச்சரிக்கையே ஆபரேஷன் சிந்தூர்.

விவேகமான முறையில், தேசிய நோக்கங்களுக்கு ஏற்ப நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் இன்னும் தொடா்கிறது. நடவடிக்கை தொடா்வதால், சரிபாா்க்கப்படாத தகவல்களை பரப்புவதை அனைவரும் தவிா்க்க வேண்டும் என ஏ. கே. பாரதி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com