
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதி மக்களைக் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்துப் பேசினார்.
ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் யூனியன் பிரதேசத்திற்கு வருகைதருவது இது இரண்டாவது முறையாகும்.
முன்னதாக பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களைச் சந்திக்க ஏப்ரல் 25 அன்று ராகுல்காந்தி ஸ்ரீநகருக்குச் சென்றார்.
பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் சென்றடைந்தார். அப்போது ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர், முதல்வர் மற்றும் பலரை சந்தித்தார்.
இன்று காலை ராகுல் காந்தி ஜம்மு விமான நிலையத்தை அடைந்தார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் பூஞ்ச் சென்றடைந்தார். அங்கு எல்லையில் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் நேரில் பார்வையிட்டார். பாகிஸ்தானில் ஏவுகணை தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க வீடு வீடாகச் சென்றார்.
மே 7 அன்று பஹல்காம் படுகொலைக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத தளங்கள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் துல்லியமான தாக்குதல்களை நடத்திய பின்னர், பாகிஸ்தான் தரப்பில் பூஞ்ச் பகுதியில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
தொடர்ந்து இந்த தாக்குதலானது நான்கு நாள்கள் நீடித்தது. ட்ரோன் தாக்குதல்களில் எல்லையில் 28 பேர் கொல்லப்பட்டனர். பூஞ்ச் மாவட்டத்தில் மட்டும் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லைப்பகுதிகளுக்கு அருகிலுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் அரசு நடத்தப்படும் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்தனர்.
இதையடுத்து இருநாடுகளுக்குமிடையேயான ராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டுவர மே 10 அன்று இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு உடன்பாட்டை எட்டின. இதையடுத்து போர் நிறுத்தப்பட்டது.
போர்ப் பதற்றத்தால் பாதிக்கப்பட்ட பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மக்களை நேரில் பார்வையிட்டு ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.