

வருகிற ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த தேசிய தேர்வுகள் வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் முதுநிலைத் தேர்வு வருகிற ஜூன் 15 ஆம் தேதி இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்டாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி மாணவர்கள் தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான சஞ்சய் குமார், என்.வி. அஞ்சாரியா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'தேர்வை இரண்டு ஷிப்டுகளாக நடத்துவது அதிகாரத்துடன் கூடிய தன்னிச்சையான அணுகுமுறை, இரண்டு வினாத்தாள்களும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கூற முடியாது. அதாவது இரண்டுமே சிரமமாகவோ அல்லது இரண்டுமே எளிதாக இருக்க முடியாது. அதனால் தேர்வை இரண்டு ஷிப்டுகளாக நடத்துவது சரியல்ல' என்று கூறிய நீதிபதிகள், நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்டில் நடத்தி முடிக்க தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், தேர்வை வெளிப்படையான, நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்றும் தேர்வுக்கு இன்னும் 2 வாரங்கள் இருப்பதால் தேவையான தேர்வு மையங்களை ஏற்பாடு செய்து ஒரே ஷிப்ட்டில் நடத்த நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.