சபரிமலை தங்கக் கவச வழக்கில் முன்னாள் செயல் அதிகாரி கைது! தங்கத்தை செப்பு என பதிவு செய்தவர்!!

சபரிமலை தங்கக் கவச வழக்கில் முன்னாள் செயல் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கருவறைக் கதவுகள் மற்றும் துவாரபாலகா் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்களில் இருந்து தங்கம் மாயமான வழக்கில் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் முன்னாள் செயல் அதிகாரி சுதீஷ் குமார் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவரிடம் எஸ்ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், விசாரணையின் நிறைவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் முன்னாள் நிா்வாக அதிகாரி பி.முராரி பாபு கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு கைது சம்பவம் நடந்துள்ளது.

2019ஆம் ஆண்டு, சுதீஷ் குமார், தேவஸ்வம் வாரியத்தின் செயல் அலுவலராகப் பணியாற்றியுள்ளார். இவரிடம் குற்றப் பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தியிருந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

துவாரபாலகர் (காவல் தெய்வம்) சிலைகள் தங்க முலாம் பூசப்பட்டவை என்பதை மறைத்து, அதற்கு பதிலாக கோயிலின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் அவற்றை செப்புத் தாள்களாகப் பதிவு செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுதீஷ் குமார், கடந்த 1990ஆம் ஆண்டு முதல் சபரிமலை கோயிலுடன் தொடர்புடையவர் என்றும், துவாரபாலக சிலைகள் உள்பட கருவறை 1998-99 ஆண்டுகளில் தங்கத்தால் வேயப்பட்டிருந்தது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், 2019 ஆம் ஆண்டில் தங்க முலாம் பூசுவதற்காக துவாரபாலக தகடுகள் பிரதான குற்றவாளியான உன்னிகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டபோது, சுதீஷ் ​​குமார் அவற்றை செப்புத் தகடுகளாக ஆவணப்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம்தான், முக்கிய குற்றவாளி, ஏற்கனவே இருந்த தங்க முலாம் பூசலை அகற்றி குற்றத்தில் ஈடுபட வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் மூன்றாவது முக்கிய குற்றவாளியாக இவர் கருதப்படுகிறார்.

கடந்த 2019-இல் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவுகள் மற்றும் துவாரபாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு அவற்றின் எடை குறைந்தது, உயா்நீதிமன்ற விசாரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து, உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, இரு வழக்குகளை விசாரித்துவரும் எஸ்ஐடி, பெங்களூரைச் சோ்ந்த தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றியை அண்மையில் கைது செய்தது. இவா், கடந்த 2019-இல் தங்கக் கவசங்களின் புதுப்பிப்புப் பணிக்கான செலவை ஏற்றவா்.

தங்கக் கவசங்களில் 2 கிலோ வரை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக, உண்ணிகிருஷ்ணன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் சில தினங்களுக்கு முன் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் நிா்வாக அதிகாரி முராரி பாபுவை கைது செய்த எஸ்ஐடி, அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. இதையடுத்து, பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

எதிா்வரும் நாள்களில் மேலும் பல தேவஸ்வ அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இவ்வழக்கில் எஸ்ஐடியின் முதல் கட்ட அறிக்கை அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. எஸ்ஐடி தனது இறுதி அறிக்கையை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்; 2 வாரங்களுக்கு ஒருமுறை விசாரணை நிலவர அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்று கேரள உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

Summary

The SIT probing the alleged disappearance of gold from the Sabarimala temple has arrested former executive officer Sudheesh Kumar, officials said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com