

தில்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம், தற்கொலைப்படைத் தாக்குதலாக இருக்கலாம் என்று தில்லி காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த கார் வெடிப்பு சம்பவத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கும் நபர் முதலில், வெடி விபத்தை ஏற்படுத்தவே முதலில் முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், அவரின் ஃபரிதாபாத் திட்டம் தோல்வியடைந்ததையடுத்து உயிரிழப்பை அதிகரிக்கவும், போலிஸாரிடமிருந்து தப்பிக்கவும், தற்கொலைப் படைத் தாக்குதலுக்குத் திரும்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கார் மெதுவாக நகர்ந்து வந்ததைடுத்து, உண்மையான இலக்கு வேறு இடமாக இருந்திருந்த இருக்கக்கூடும் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவத்தை பின்புலத்தில் இருந்து இயக்கியவர்கள் யார்? எவ்வாறு நடந்தது என்பது குறித்து காவல் துறை தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியாணா காவல்துறையினர் இணைந்து ஃபரிதாபாத்தில் 360 கிலோ வெடிபொருள் மற்றும் வெடிமருந்துகளை மீட்டனர் என்பதும், இந்த விஷயத்தில் மருத்துவர் முசம்மில் மற்றும் ஆதில் ராதர் ஆகிய இருவரை திங்கள்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தில்லி கார் வெடிப்பு
தில்லியில் நெரிசல் மிக்க செங்கோட்டைப் பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை இரவு 7 மணி அளவில் மெதுவாக சென்ற கார் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.
அந்தக் காரில் பயணிகள் இருந்ததாகவும், கார் வெடித்ததில் அருகில் இருந்த வாகனங்களும் கடும் சேதமடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் 12 பேர் பலியாகினர், 24 பேர் காயமடைந்தனர்.
சம்பவம் இடத்துக்கு 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று இரவு 7.29 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், ஆறு கார்கள், இரண்டு இ-ரிக்.ஷாக்கள், ஒரு ஆட்டோவும் தீயில் எரிந்து நாசமாகியதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
வெடிப்பு நடந்த இடத்தில் உடல் பகுதிகள் சிதறிக் கிடப்பதை கண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.