

தில்லியில் பயங்கரவாதிகளின் திட்டம் வெற்றி பெற்றிருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி தெரிவித்த கருத்து சர்ச்சையாகியுள்ளது.
தில்லி செங்கோட்டை அருகே நேற்று (நவ.10) மாலை சாலையில் நின்றுகொண்டிருந்த ‘ஹுண்டாய் ஐ-20’ கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், பலர் காயங்களுடன் தில்லியில் உள்ள லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த இடத்தில் நாட்டின் அனைத்து புலனாய்வு அமைப்புகளும் விசாரணைத் தொடங்கியிருக்கும் நிலையில், முதல்கட்டமாக முகமது உமர் என்ற மருத்துவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து காரில் ஒரு டெட்டனேட்டரை வைத்து காரை வெடிக்கச் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தில்லி கார் வெடிப்பு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதன் ராம் கூறிய பதில் சர்ச்சையாகியுள்ளது.
அவர் பேசியதாவது:
“பயங்கரவாதிகள் நீண்ட காலமாக தில்லியைக் குறிவைத்து வருகின்றனர். பயங்கரவாதிகள் ஊடுருவிய தகவல்கள் கிடைத்திருந்தன. இன்று அவர்களின் சதித் திட்டம் வெற்றி பெற்றுவிட்டது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பயங்கரவாதிகள் பழிவாங்க விரும்புகிறார்கள்” எனக் குறிப்பிட்டார்.
மத்திய அமைச்சரின் பேச்சை தொடர்ந்து, ஊடுருவல் பற்றிய தகவல்கள் கிடைத்திருந்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யப்படாதது ஏன்? பயங்கரவாதிகள் சுதந்திரமாக சுற்றித் திரிந்தது எப்படி? வெடி மருந்துகள் தில்லிக்குள் வந்தது எப்படி? போன்ற கேள்விகள் சமூக ஊடகங்களில் இணையவாசிகளால் எழுப்பப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடிஅரசுமுறை பயணமாக பூடானுக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்ற நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், உள்துறை அமைச்சக அதிகாரிகள், விசாரணை அமைப்புகளின் இயக்குநர்கள் உயர்நிலைக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.