
பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னதாக மணிப்பூரில் கனமழை பெய்து வருவதால், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டிக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதனைத்தொடர்ந்து, மிசோரம் மாநிலத்தில் ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி, அதன்பிறகு மணிப்பூருக்கு வருகை தர உள்ளார்.
தலைநகர் இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று, புதிய தலைமைச் செயலகம், காவல் துறை புதிய தலைமையகம் உள்ள ரூ. 8,500 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்த நிலையில், இம்பாலில் உள்ள காங்லா கோட்டையின் சில பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருவகின்றது. நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், சூரசந்த்பூரிலும் கனமழை பெய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக சூரசந்த்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,
இன்று திட்டமிட்டபடி பிரதமர் சூரசந்த்பூருக்கு வருகை தருவார், வேறுவிதமாக பரப்பப்படும் வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். பிரதமர் வருகைக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் கடந்த 2023ல் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே இனமோதல் ஏற்பட்ட பிறகு தற்போது முதல் முறையாக பிரதமர் மோடி பயணிப்பதால் மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
குகி கோட்டையான சூரசந்த்பூருக்கு மோடி பிற்பகலில் செல்ல உள்ளார். பின்னர் அவர் மைதேயி சமூகத்தின் கோட்டையான இம்பாலுக்கு பயணம் மேற்கொள்வார். இந்த பயணத்தின் போது பிரதமர் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைப்பார், மேலும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த சிலருடன் கலந்துரையாடுவார்.
மாநிலத்தில் இன வன்முறை வெடித்ததில் 260-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தொழில்முனைவோருக்கான மையமாக மாறும் மிசோரம்: பிரதமர் மோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.