
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறதே தவிர பதில் எதுவும் இல்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
கர்நாடகத்தில் ஆலந்து சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 6,018 வாக்காளர்களை நீக்க முயற்சித்து நடந்துள்ளதாகவும் வாக்குத் திருட்டுக்கு தேர்தல் ஆணையம் ஒத்துழைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று கூறியிருந்தது.
இந்நிலையில் இதுபற்றி பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா,
"ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது. ஆனால் பதில் எங்கே? தேர்தல் ஆணையம் எங்களுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.
உண்மை என்னவென்றால் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கேள்விகளை எழுப்பியதால் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இந்திய தேர்தல் ஆணையம், கர்நாடக குற்ற புலனாய்வு பிரிவினருடன் ஒத்துழைக்கவில்லை. கர்நாடக சிஐடி 18 முறை மனு அளித்து தேர்தல் ஆணையத்திற்கு தரவுகளை வழங்க நினைவூட்டியுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை.
ஞானேஷ் குமார், வாக்குத் திருடர்களுடன் கைகோர்த்து இருக்கிறார். அப்படியிருந்தும் நாங்கள் ஒரு பிரச்சினையை எழுப்புகிறோம் என்றால் தேர்தல் செயல்முறையின் ஒருமைப்பாடு மீட்டெடுக்கப்படுவதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம்.
நாம் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் அது பிரச்னை அல்ல. தேர்தல் ஜனநாயகம் தோற்கக் கூடாது என்பதுதான் பிரச்னை. அவர்களின் சிறந்த நாடுகள் நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான். அவற்றைப் போல இந்தியா ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள். 2014 க்கு முன்பு இந்தியாவைச் சுற்றியுள்ள மற்ற அனைத்து நாடுகளும் இந்தியாவைப் போல இருக்க ஆசைப்பட்டேன்" என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.