
லண்டன் டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள காந்தி சிலையின் கீழ், ’மோடியும் காந்தியும் ஹிந்துஸ்தானி பயங்கரவாதிகள்’ என்று மர்ம நபர்கள் எழுதியுள்ளனர்.
மேலும், காந்தி சிலை மீது வெள்ளை நிற பெயிண்ட்டும் வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தி, சட்ட மாணவராக படித்ததை போற்றும் வகையில், டேவிஸ்டாக் சதுக்கத்தில் 1968 ஆம் ஆண்டு காந்தியின் வெண்கலச் சிலை திறக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் அவையால், காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதியை அகிம்சை தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் 2 ஆம் தேதியன்று டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள காந்தி சிலைக்கு மலர் அஞ்சலி செலுப்படுவது வழக்கம்.
இதற்கான விழா ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், காந்தி சிலையின் கீழ், ’மோடியும் காந்தியும் ஹிந்துஸ்தானி பயங்கரவாதிகள்’ என மர்ம நபர்கள் எழுதியுள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இந்திய தூதரகம் தெரிவித்திருப்பதாவது:
"லண்டன் டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்திய வெட்கக்கேடான செயலை இந்திய தூதரகம் வன்மையாக கண்டிக்கிறது. இது வெறும் சதியல்ல, சர்வதேச அகிம்சை தினத்துக்கு மூன்று நாள்களுக்கு முன்பு, அகிம்சை கருத்து மற்றும் மகாத்மாவின் மரபு மீதான தாக்குதலாகும்.
உள்ளூர் அதிகாரிகளுடன் உடனடி நடவடிக்கைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. சிலையை மீண்டெடுக்கும் நடவடிக்கையில் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.